நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதாரவிலையை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு

விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கும் நடவடிக்கையாக சன்ன மற்றும் பொது ரக நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதாரவிலையை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதாரவிலையை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு
Published on

சென்னை:

நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதாரவிலைய உயர்த்தி முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

உழவர் பெருமக்களின் வாழ்வு வளம்பெறும் வகையில், வேளாண் உற்பத்தியைப் பெருக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதோடு, விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதற்கான நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது.  எனவே தான் நெல்லுக்கு மத்திய அரசு நிர்ணயிக்கும் கொள்முதல் விலையை விட தமிழ்நாடு அரசு அதிக விலையை  விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஆண்டுதோறும் நிர்ணயித்து வழங்கி வருகிறது.

அந்த வகையில், நடப்பு கொள்முதல் பருவம் 2017-2018-ல் மத்திய அரசு நெல்லிற்கான குறைந்தபட்ச ஆதாரவிலையாக குவிண்டால் ஒன்றுக்கு சன்னரகத்திற்கு ரூ.1590/-ம், பொது ரகத்திற்கு ரூ.1550/-ம் நிர்ணயம் செய்துள்ளது. விவசாயிகளின் நலன் கருதி ஊக்கத்தொகையாக குவிண்டால் ஒன்றுக்கு சன்ன ரகத்திற்கு ரூ.70/-ம், பொது ரகத்திற்கு ரூ.50/-ம் கூடுதலாக வழங்க தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது. அதன்படி, நெல் குவிண்டால் ஒன்றுக்கு சன்னரகத்திற்கு ரூ.1660/- மற்றும் பொது ரகத்திற்கு ரூ.1600/- என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் தமிழ்நாடு முழுவதும் 1564 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கவும்,  20 இலட்சம் மெட்ரிக் டன் நெல் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. வேளாண் பெருமக்களுக்கு தேவைப்படின் கூடுதலாக புதிய நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்கவும் நான் அறிவுறுத்தியுள்ளேன். இதற்காக சென்னை மற்றும் நீலகிரி மாவட்டங்களைத் தவிர்த்து, அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகளுக்குத் தேவையான இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்திட மாவட்ட ஆட்சியர்களுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.

இதன் காரணமாக, விவசாயிகள் நீண்ட தூரம் பயணம் செய்யாமல், உற்பத்தி செய்யப்படும் நெல்லை, தமிழ்நாடு அரசு நிர்ணயித்த விலைக்கு நேரடி கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய இயலும்.  எனது இந்த நடவடிக்கை விவசாய பெருங்குடி மக்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக அமையும்

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com