

சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
3 நாள் பயணமாக இந்தியாவுக்கு வருகை புரிந்துள்ள இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சரிடம் மத்திய அரசு தமிழக மீனவர்களின் பிரச்சினை குறித்து தெளிவுபடத் தெரிவிக்க வேண்டும்.
குறிப்பாக இலங்கை அமைச்சர் இந்தியா வந்துள்ள நிலையில் இலங்கையில் தமிழக மீனவர்களின் படகுகள் ஏலம் விடப்படுவது மிகவும் வேதனைக்குரியது.
இந்நிலையில் மத்திய அரசு, இலங்கை அமைச்சரிடம் தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடுவதை நிறுத்த வலியுறுத்த வேண்டும். இதனைத் தொடர்ந்து தமிழக மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கும்போது இலங்கை கடற்படையினரால் அத்துமீறிய நடவடிக்கைகள், அராஜகங்கள், தாக்குதல்கள் போன்றவற்றால் தமிழக மீனவர்களும், படகுகளும் பாதிக்கப்படக்கூடாது என்பதையும் தெரிவிக்க வேண்டும்.
மிக முக்கியமாக இந்தியா, இலங்கைக்கு பொருளாதார ரீதியாக உதவுவதோடு நட்புறவு தொடர்வதற்கும், இலங்கை அரசு தமிழக மீனவர்களின் மீன்பிடி படகுகளை ஏலம் விடாமல் தமிழக மீனவர்களிடம் ஒப்படைப்பதற்கும், தமிழக மீனவர்களின் மீன்பிடித்தொழில் பாதுகாக்கப்படுவதற்கும் ஏதுவாக பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.