கொரோனா நோயாளிகளின் வீட்டில் இனி நோட்டீஸ் ஒட்டப்படாது -டெல்லி அரசு

கொரோனா நோயாளிகளின் வீட்டில் இனி நோட்டீஸ் ஒட்டுவது நிறுத்தப்படுவதாக உயர் நீதிமன்றத்தில் டெல்லி அரசு உறுதியளித்துள்ளது.
அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்
Published on

புதுடெல்லி:

டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் குஷ்கர்லா தாக்கல் செய்திருந்த மனுவில், “கொரோனா நோயாளிகளின் வீடுகளுக்கு வெளியே நோட்டீஸ் ஒட்டுவது அவர்களின் அந்தரங்க உரிமை, வாழும் உரிமை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்துக்கு எதிரானது. குடியிருப்போர் நலச்சங்க உறுப்பினர்களிடமும் சமூக ஊடக குழுக்களிலும் கொரோனா நோயாளிகளின் பெயர்கள் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. இது நோயாளிகளை களங்கப்படுத்துவதாக உள்ளது” என்று தெரிவித்திருந்தார். 

இந்த மனு நீதிபதிகள் ஹிமா கோலி, சுப்ரமணியம் பிரசாத் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது டெல்லி அரசுத்தரப்பில், “கொரோனா நோயாளிகளின் வீடுகளுக்கு வெளியே நோட்டீஸ் ஒட்டுவதற்கு எதிராக அதிகாரிகளுக்கு விரைவில் சுற்றறிக்கை அனுப்பப்படும். ஏற்கெனவே ஒட்டப்பட்டிருந்த நோட்டீஸ்கள் உடனடியாக அகற்றப்படும்” என உறுதி அளிக்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com