

சென்னை:
கொரோனா தாக்குதலில் இருந்து பாதுகாத்து கொள்ள பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதற்காக நாளை மக்கள் ஊரடங்கு நடைபெறுகிறது.
பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம், வீட்டிற்குள் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. முழு கடையடைப்பு போலவே இந்த ஊரடங்கு நடக்கிறது. பொதுமக்கள் நடமாட்டம் இருக்காது என்பதால் பஸ், ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆட்டோக்களும் ஓடாது என்று சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து சி.ஐ.டி.யு. மாநிலத் தலைவர் சவுந்தர்ராஜன் கூறியதாவது:-
கொரோனா வைரஸ் நாட்டில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடாது என்பதற்காக சுய ஊரடங்கு நடக்கிறது.
இதையடுத்து நாளை பொதுமக்கள் பயணத்தை தவிர்க்கும் வகையில் ஆட்டோ தொழிலாளர்கள் ஆட்டோவை இயக்கமாட்டார்கள். காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை சென்னை உள்பட தமிழகம் முழுவதும் ஆட்டோக்கள் ஓடாது. சென்னையில் 30 ஆயிரம் ஆட்டோக்கள் உள்ளன. இவை நாளை ஒருநாள் நிறுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதே போல கால் டாக்சி, வாடகை கார் சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் ஆன்லைன் வழியாகவும், போன் வழியாகவும் புக்கிங் செய்து கார், ஆட்டோக்களில் பயணம் செய்கின்றனர். நாம் இருந்த இடத்தில் இருந்து பயணத்தை தொடரக்கூடிய வழி இருக்கிறது. நாளை தினம் ஷேர் ஆட்டோ, கார், கால் டாக்சி உள்ளிட்ட எந்த வாகனங்களும் ஓடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.