மதுரையில் நாளை நடைபெற இருந்த 24 திருமணங்கள் தள்ளிவைப்பு

பிரதமர் வேண்டுகோள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி மதுரையில் நாளை 24 திருமண மண்டபங்களில் நடைபெற இருந்த திருமணங்கள் தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

மதுரை:

கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், நாளை (ஞாயிறு) நாடு முழுவதும் மக்கள் சுய ஊரடங்கு கடைபிடிக்குமாறு பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.

அதன்படி நாளை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பஸ்கள், ரெயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மதுரை நகர் பகுதியில் 67 பெரிய திருமண மண்டபங்கள் உள்ளன. நாளை முகூர்த்தநாள் என்பதால் பெரும்பாலான திருமண மண்டபங்களில் திருமணத்துக்கு முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. பிரதமர் வேண்டுகோள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி 24 திருமண மண்டபங்களில் நடைபெற இருந்த திருமணங்கள் தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரு மணவீட்டாரும் இணைந்து இந்த முடிவை மேற்கொண்டுள்ளனர்.

இதேபோல் சிறிய திருமண மண்டபங்கள், கோவில்களில் நடைபெற இருந்த ஒருசில திருமணங்களும் வேறு தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

மக்கள் சுய ஊரடங்கு வேண்டுகோளையடுத்து மதுரையில் நாளை வாடகை கார்கள், கால் டாக்சிகள், ஆட்டோக்கள் ஓடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com