search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொண்டாமுத்தூர் அருகே ஊருக்குள் 6 காட்டு யானைகள் முகாம்- பொதுமக்கள் அச்சம்
    X

    தொண்டாமுத்தூர் அருகே ஊருக்குள் 6 காட்டு யானைகள் முகாம்- பொதுமக்கள் அச்சம்

    • தீத்திபாளையம் ரேசன் கடை ஷட்டரை உடைத்து, அரிசி, பருப்பு, சர்க்கரை மூட்டைகளை தின்றது
    • வனத்துக்கு முன்பாக உள்ள அடர்ந்த புதற்காட்டில் தஞ்சமடைந்து நிற்பதால் பொதுமக்கள் அச்சம்

    வடவள்ளி,

    கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதியில் மலை அடிவார கிராமங்களுக்கு அடிக்கடி காட்டு யானைகள் வந்து செல்வது வழக்கம்.

    உணவு மற்றும் தண்ணீர் தேடி இரவு நேரங்களில் வரும் யானைகள் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் புகுந்து விளை பயிர்களை சேதப்படுத்துவதாக தொடர்ந்து விவசாயிகள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

    இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 8 யானைகள் கொண்ட கூட்டம், தீத்திபாளையம் கிராமத்திற்குள் புகுந்தது.

    அப்போது அங்கு இருந்த ரேசன் கடையின் ஷட்டரை உடைத்து, உள்ளே இருந்த அரிசி, பருப்பு, சர்க்கரை மூட்டைகளை வெளியே எடுத்து போட்டு சாப்பிட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து அங்கு திரண்ட பொதுமக்கள் வனத்துறை உதவியுடன் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். நேற்றிரவு காட்டு யானைகள் கூட்டம் மீண்டும் வனப்பகுதியில் இருந்து வெளியேறி ஊருக்குள் வந்துள்ளன.

    நள்ளிரவு நேரத்தில் அய்யாசாமி மலை அடிவாரத்தில் இருந்து வெளிவந்த யானைகள் வனத்தையொட்டி உள்ள தோட்டங்களிலும், கிராமப்பகுதிகளிலும் உலா வந்துள்ளன.

    இதனால் அச்சம் அடைந்த அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். வனத்துறையினர் விரைந்து சென்று 3 குழுக்களாக பிரிந்து யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து அப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் குப்பனூர் பகுதி வழியாக சென்று அடர் வனத்துக்கு முன்பாக உள்ள அடர்ந்த புதற்காட்டில் தஞ்சமடைந்துள்ளன. இந்த யானைகளை விரட்ட வனத்துறை தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

    இந்த பகுதிகளில் யானை நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. இரவு நேரங்களில் உணவு மற்றும் தண்ணீர் தேடி இந்த யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் வருவது வழக்கமாகியுள்ளது.

    அவ்வாறு ஊருக்குள் வரும் யானைகளால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. விளை நிலங்களை தொடர்ந்து யானைகள் சேதப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே யானைகள் ஊருக்குள் வராமல் இருக்கும் வகையில் வனத்து

    றையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×