செய்திகள்
நடிகை ரோஜா

எனக்கு பதவி வழங்கிய ஜெகன்மோகனுக்கு நன்றி- நடிகை ரோஜா பேட்டி

Published On 2019-07-28 13:54 GMT   |   Update On 2019-07-28 13:54 GMT
ஆந்திர மாநில தொழிற்சாலைகள் உள்கட்டமைப்பு வாரியத் தலைவர் பதவி வழங்கிய ஜெகன்மோகன் ரெட்டிக்கு நடிகை ரோஜா நன்றி தெரிவித்துள்ளார்.

திருப்பதி:

நகரி தொகுதி எம்.எல்.ஏ.வான நடிகை ரோஜாவுக்கு ஆந்திர மாநில தொழிற்சாலைகள் உள்கட்டமைப்பு வாரியத் தலைவர் பதவி வழங்கப்பட்டது. அவர் பதவியேற்று முதல் முறையாக நகரி தொகுதிக்கு வந்தார். அவரை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினரும், ஆதரவாளர்களும் வரவேற்றனர்.

நகரியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து அவர், கட்சியினர் மற்றும் ஆதரவாளர்களுடன் ஏராளமான பைக்குகளில் ஊர்வலமாக சென்று பொதுமக்களை சந்தித்தார்.

நகரியில் புதிதாக அமைக்கப்பட்ட முன்னாள் முதல் அமைச்சர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் உருவச்சிலையை நடிகை ரோஜா திறந்து வைத்தார். அப்போது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

ஆந்திர மாநிலத்தில் ஆட்சி மாற்றம் வரவேண்டும் என பொதுமக்கள் தீர்மானித்தனர். ஜெகன்மோகன்ரெட்டி ஆந்திராவில் பாதயாத்திரை மேற்கொண்டபோது, அவர் பொதுமக்களை நேரில் சந்தித்து பல நல்ல வாக்குறுதிகளை அறிவித்தார்.

இதனால் தான் பொதுமக்கள் அவரை முதல் அமைச்சர் பதவியில் அமர வைத்துள்ளனர். பெண்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்வதில் ஜெகன்மோகன் ரெட்டியைப்போல் ஒரு தலைவர் யாரும் இருக்க முடியாது.

நகரி தொகுதியில் புதிய தொழிற்சாலைகள் அமைக்கப்படும். இங்குள்ள இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகள் வழங்கப்படும். எனக்கு இந்த பதவியை வழங்கிய ஜெகன்மோகன் ரெட்டிக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.


இந்த பதவியில் நான் நியாமாக இருந்து பொதுமக்களுக்கு பல வளர்ச்சி பணிகளை மேற்கொள்வேன். தொகுதியில் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது திரைப்பட இயக்குனரும், கணவருமான ஆர்.கே.செல்வமணி மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர், ஆதரவாளர்கள் பலர் உடனிருந்தனர். 

Tags:    

Similar News