தமிழ்நாடு

ஏற்காடு பஸ் விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்- எடப்பாடி பழனிசாமி

Published On 2024-05-01 06:23 GMT   |   Update On 2024-05-01 06:43 GMT
  • தமிழ்நாடு முழுவதிலும் இருந்து கோடை வெயிலை சமாளிக்க, மக்கள் மலைவாசஸ்தலங்களை நோக்கி படையெடுத்துச் செல்கின்றனர்.
  • பொது போக்குவரத்து ஓட்டுநர்கள் மலைப் பகுதியில் ஓட்டி பழக்கமானவர்களா என்பதை உறுதி செய்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

சென்னை:

அ.தி.மு.க. பொதுச்செயயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-

சேலம் மாவட்டம், ஏற்காடு மலைப் பாதையில் ஏற்காட்டில் இருந்து சேலம் நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து 13-வது கொண்டை ஊசி வளைவில் திரும்ப முயன்றபோது, சுமார் 60 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.

தகவலறிந்து சென்ற தீயணைப்புப் படையினர், காயமடைந்தவர்களை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். சம்பவ இடத்திலேயே 4 பேர் இறந்ததாகவும், மருத்துவமனையில் மேலும் 2 பேர் இறந்ததாகவும், 2 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாடு முழுவதிலும் இருந்து கோடை வெயிலை சமாளிக்க, மக்கள் மலைவாசஸ்தலங்களை நோக்கி படையெடுத்துச் செல்கின்றனர். எனவே, அரசு உடனடியாக உரிய அதிகாரிகளை பணிக்கு அமர்த்தி, அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் சோதனை சாவடி அமைத்து, பேருந்து மற்றும் இதர வாகன ஓட்டுநர்களை பரிசோதனை செய்யவும், பொது போக்குவரத்து ஓட்டுநர்கள் மலைப் பகுதியில் ஓட்டி பழக்கமானவர்களா என்பதை உறுதி செய்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

இந்த விபத்தில் பலியான 6 பேர்களின் குடும்பத்தினருக்கும் தலா ரூ. 10 லட்சம் நிதியுதவி வழங்கிடவும்; பலத்த காயமடைந்தோருக்கு ரூ. 2 லட்சமும், சிறு காயமடைந்தோருக்கு ரூ. 50 ஆயிரமும், அரசின் சார்பில் நிதியுதவி வழங்கிடவும், உயர் மருத்துவ சிகிச்சை அளித்திடவும் அரசை வலியுறுத்துகிறேன்.

இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவர்களுடைய ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதிபெறவும், மேலும் இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்றும், எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News