search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் கடை அடைப்பு
    X

    அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் கடை அடைப்பு

    அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.

    யாழ்ப்பாணம்:

    இலங்கையில் நடந்த இறுதி கட்ட போரின் போதும், அதன் பிறகும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்ட தமிழர்கள் கைது செய்யப்பட்டு அனுராதபுரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் வழக்குகளை அனுராதபுரத்தில் இருந்து வவுனியாவுக்கு மாற்ற வேண்டும். பொதுமன்னிப்பின் அடிப்படையில் அவர்கள் அனைவரையும் விடுவிக்க வலியுறுத்தியும் அனுராதபுரம் ஜெயில் கைதிகள் உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது.

    இதற்கு ஆதரவு தெரிவித்த தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் இணைந்து இன்று வடக்கு மாகாணத்தில் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து இருந்தனர். தமிழ் தேசிய கூட்ட மைப்பு, தமிழ் மக்கள் பேரவை உள்பட 19 அரசியல் அமைப்புகள் மற்றும் 50 சிவில் அமைப்புகள் முழு அடைப்புக்கு முழுமையான ஆதரவு அளித்தன.

    அதை தொடர்ந்து இன்று வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. அங்குள்ள கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. அதே போன்று வவுனியா, கிளிநொச்சி மற்றும் முல்லைத் தீவு மாவட்டங்களிலும் கடையடைப்பு போராட்டம் நடந்தது. இங்கு தனியார் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

    எனினும் அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் நகர பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மாணவர்கள் செல்லவில்லை.

    மன்னார் மாவட்டத்தில் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. மன்னார் பசார் பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. மன்னாரில் இருந்து புறப்படும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் முழுமையாக ஓடவில்லை. மாணவர்களும் பள்ளிக்கு செல்லவில்லை.

    Next Story
    ×