search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.எஸ்.எல். கால்பந்து புனே அணி 2-வது வெற்றியை பெறுமா?: மும்பையுடன் இன்று மோதல்
    X

    ஐ.எஸ்.எல். கால்பந்து புனே அணி 2-வது வெற்றியை பெறுமா?: மும்பையுடன் இன்று மோதல்

    ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் புனே-மும்பை அணிகள் மோதுகின்றன.
    புனே:

    ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் புனே-மும்பை அணிகள் மோதுகின்றன.

    10 அணிகள் இடையிலான 4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா 2 முறை உள்ளூர், வெளியூர் அடிப்படையில் மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

    இந்த போட்டி தொடரில் புனேயில் உள்ள ஸ்ரீ ஷிவ் சத்ரபதி ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) இரவு நடைபெறும் 11-வது லீக் ஆட்டத்தில் எப்.சி.புனே சிட்டி-மும்பை சிட்டி எப்.சி. அணிகள் மோதுகின்றன.

    புனே அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் சொந்த மண்ணில் 2-3 என்ற கோல் கணக்கில் டெல்லி டைனமோஸ் அணியிடம் தோல்வி கண்டது. 2-வது ஆட்டத்தில் 4-1 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியன் அட்லெடிகோ டி கொல்கத்தா அணியை அதன் சொந்த மண்ணில் பதம் பார்த்தது.

    மும்பை அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் 0-2 என்ற கோல் கணக்கில் பெங்களூரு அணியிடம் தோல்வியை சந்தித்தது. 2-வது ஆட்டத்தில் உள்ளூரில் 2-1 என்ற கோல் கணக்கில் கோவாவை தோற்கடித்தது. இந்த தொடரில் 2-வது வெற்றியை ருசிக்க இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

    போட்டி குறித்து புனே அணியின் பயிற்சியாளர் ரான்கோ போபோவிச் அளித்த பேட்டியில், ‘சொந்த மண்ணில் முதல் ஆட்டத்தில் தோல்வியைச் சந்தித்தது ஏமாற்றம் அளித்தாலும், அடுத்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் அணியான கொல்கத்தாவை வீழ்த்தியது மகிழ்ச்சி அளிக்கிறது. வெளியூரில் நாங்கள் அதிகமாக வெற்றி கண்டதில்லை. இதனால் வெளியூரில் வெற்றி பெற்று 3 புள்ளிகளை பெற்றது எங்களுக்கு முக்கியமானதாகும். ரசிகர்களுக்கு பொழுதுபோக்கு அளிக்கும் வகையில் விளையாட வேண்டும் என்று எனது வீரர்களை எப்பொழுதும் நான் சொல்வது உண்டு. அதனை நாங்கள் முதல் ஆட்டத்தில் செய்யாவிட்டாலும், 2-வது ஆட்டத்தில் செய்து காட்டினோம். கடந்த சீசனில் முதல் முதல் ஆட்டத்தை தவிர்த்து எல்லா ஆட்டங்களிலும் நாங்கள் கோல்கள் அடித்தோம். அதேபோல் இந்த முறையும் கோல்கள் அடிக்க முயற்சிப்போம். ஆனால் கால்பந்து ஆட்டத்தில் என்ன நடக்கும் என்பதை ஒருபோதும் யூகிக்க முடியாது’ என்றார்.

    மும்பை அணியின் பயிற்சியாளர் அலெக்சாண்ட்ரே குய்மாரேஸ் கருத்து தெரிவிக்கையில், ‘புனே அணியினர் துல்லியமான தாக்குதல் ஆட்டத்தை தொடுத்து கோல்கள் அடிக்கிறார்கள். ஒரு அணி அப்படி துல்லியமாக செயல்படும் பட்சத்தில் நாங்கள் ஆட்டத்தில் தவறு எதுவும் இழைக்ககூடாது. தவறு செய்தால் அவர்கள் எங்களை தண்டித்து விடுவார்கள். அதேநேரத்தில் எங்கள் அணியினர் சொந்த மண்ணில் பெற்ற வெற்றி நம்பிக்கையுடன் இந்த ஆட்டத்தில் களம் காணுகிறார்கள். எங்கள் அணி வீரர்கள் நல்ல நிலையில் உள்ளனர்’ என்றார்.

    புனே-மும்பை அணிகள் இதுவரை 6 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் புனே அணி 3 முறையும், மும்பை அணி 2 முறையும் வெற்றி கண்டுள்ளன. ஒரு ஆட்டம் டிராவில் முடிந்தது. இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கின்றன. 
    Next Story
    ×