search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.எஸ்.எல். கால்பந்து: லீக் போட்டிகளில் புனே, பெங்களுரூ அணிகள் வெற்றி
    X

    ஐ.எஸ்.எல். கால்பந்து: லீக் போட்டிகளில் புனே, பெங்களுரூ அணிகள் வெற்றி

    ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் இன்று நடைபெற்ற லீக் போட்டிகளில் எப்.சி. புனே சிட்டி, பெங்களுரூ எப்.சி. அணிகள் வெற்றி பெற்றன.
    கொச்சி:

    4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. 10 அணிகள் இடையிலான இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

    இந்த போட்டி தொடரில் கொல்கத்தாவில் இன்று மாலை 5:30 மணிக்கு நடைபெற்ற 9-வது லீக் ஆட்டத்தில் அதெலிடிகோ டி கொல்கத்தா எப்.சி. - எப்.சி. புனே சிட்டி அணிகள் மோதின. இரு அணிகளுக்கும் இது 2-வது லீக் ஆட்டமாகும். புனே அணி முதல் போட்டியில் டெல்லி அணியிடம் தோற்றது. கொல்கத்தா - கேரளா அணிகள் விளையாடிய முதல் போட்டி டிராவில் முடிந்தது.



    போட்டி தொடங்கியது முதல் இரு அணியினரும் மாறி மாறி கோல் போட முயற்சித்தனர். முதல் பாதிநேர ஆட்டத்தின் 13-வது நிமிடத்தில் புனே அணியின் மார்செலோ லிட்டே பெரேரா ஒரு கோல் அடித்தார். தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 50-வது நிமிடத்தில் கொல்கத்தா அணியின் பிபின் சிங் கோல் அடித்து சமன் செய்தார். அதன்பின் 51-வது நிமிடத்திலேயே புனேவின் ரோஹித் குமார் கோல் அடித்தார்.

    60-வது நிமிடத்தில் புனே அணியின் மார்செலோ இரண்டாவது கோல் அடித்தார். இதனால் மும்பை அணி 3-1 என முன்னிலை பெற்றது. அதன்பின் 80-வது நிமிடத்தில் புனேவின் எமிலியானோ அல்ஃபரோ கடைசி கோல் அடித்தார். இதையடுத்து 4-1 என்ற கோல்கணக்கில் புனே அணி வெற்றி பெற்றது. புனே அணியின் மார்செலோ லிட்டே பெரேரா ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.



    பெங்களுரூவில் இரவு 8:00 மணிக்கு நடைபெற்ற 10-வது லீக் ஆட்டத்தில் பெங்களுரூ எப்.சி. - டெல்லி டைனமோஸ் அணிகள் மோதின. இது இரு அணிகளுக்கும் இரண்டாவது போட்டியாகும். பெங்களுரூ அணி முதல் போட்டியில் வெற்றி பெற்றது. டெல்லி அணி முதல் போட்டியை டிரா செய்தது.

    இப்போட்டியின் முதல் பாதி நேர ஆட்டத்தின் 23-வது மற்றும் 45+4-வது நிமிடங்களில் பெங்களுரூவின் எரிக் பார்தலூ இரண்டு கோல்கள் அடித்தார். தொடர்ந்து 57-வது நிமிடத்தில் பெங்களுரூவின் லென்னி ரொட்ரிகஸ் ஒரு கோல் அடித்தார். இதன்மூலம் பெங்களுரூ அணி 3-0 என முன்னிலை பெற்றது.

    போட்டியின் 86-வது நிமிடத்தில் டெல்லி அணியின் கலு யூசி பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்றினார். 87-வது நிமிடத்தில் பெங்களுரூவின் மிகு பெங்களுரூ அணிக்காக நான்காவது கோல் அடித்தார். இதன்மூலம் பெங்களுரூ அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. பெங்களுரூவின் எரிக் பார்தலூ ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

    இன்றைய போட்டிகளின் முடிவில் பெங்களுரூ அணி 6 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கும், புனே அணி 3 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கும் முன்னேறின. டெல்லி அணி 3 புள்ளிகளுடன் 6-வது இடத்திலும், கொல்கத்தா அணி 1 புள்ளியுடன் 9-வது இடத்திலும் உள்ளன.

    அடுத்ததாக 29-ம் தேதி புனேவில் நடைபெறும் லீக் போட்டியில் மும்பை சிட்டி எப்.சி. - எப்.சி. புனே சிட்டி அணிகள் மோத உள்ளன.
    Next Story
    ×