search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொல்கத்தா டெஸ்ட்: 3-வது நாள் ஆட்ட முடிவில் இலங்கை 165/4; இந்தியாவுக்கு நெருக்கடி
    X

    கொல்கத்தா டெஸ்ட்: 3-வது நாள் ஆட்ட முடிவில் இலங்கை 165/4; இந்தியாவுக்கு நெருக்கடி

    கொல்கத்தா டெஸ்டில் இலங்கை அணி 3-வது நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியாவை விட 7 ரன்கள் மட்டுமே பின்தங்கிய நிலையில் உள்ளது.
    இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி பீல்டிங் தேர்வு செய்தது.

    முதல் இரண்டு நாள் ஆட்டங்கள் மழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இரண்டு நாட்களும் 32.5 ஓவர்களே வீசப்பட்டது. இதில் இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 74 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரா 47 ரன்களுடனும், சகா 6 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.



    இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய புஜாரா அரைசதம் அடித்தார். ஆனால் 52 ரன்கள் எடுத்த நிலையில் காமேகே பந்தில் க்ளீன் போல்டானார். அதன்பின் வந்த சகா (29), ஜடேஜா (22), புவனேஸ்வர் குமார் (13) மற்றும் மொகமது ஷமி (24) ஆகியோர் ஓரளவிற்கு ரன்கள் சேர்க்க இந்தியா முதல் இன்னிங்சில் 172 ரன்களில் ஆல்அவுட் ஆனது.

    இலங்கை அணி தரப்பில் லக்மல் நான்கு விக்கெட்டுக்களும், காமேகே, ஷனகா மற்றும் பெரேரா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள்.



    பின்னர் இலங்கை முதல் இன்னிங்சை தொடங்கியது. அந்த அணியின் சமரவிக்ரமா, கருணாரத்னே ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். கருணாரத்னே 8 ரன்கள் எடுத்த நிலையிலும், சமரவிக்ரமா 23 ரன்கள் எடுத்த நிலையிலும் ஆட்டம் இழந்தனர். முதல் இரண்டு விக்கெட்டுக்களை இழக்கும்போது இலங்கை 34 ரன்கள் எடுத்தது.

    3-வது விக்கெட்டுக்கு திரிமன்னே உடன் மேத்யூஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் அரைசதம் அடித்தனர். இதனால் இந்தியா முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை இலங்கை நெருங்கியது.

    திரிமன்னே 51 ரன்கள் எடுத்த நிலையிலும், மேத்யூஸ் 52 ரன்கள் எடுத்த நிலையில் உமேஷ் யாதவ் பந்தில் ஆட்டம் இழந்தனர்.

    5-வது விக்கெட்டுக்கு டிக்வெல்லா உடன் கேப்டன் சண்டிமல் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடியது. இலங்கை அணி 45.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்திருக்கும்போது வெளிச்சமின்மையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.



    பின்னர் அத்துடன் 3-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. 3-வது நாள் ஆட்ட முடிவில் சண்டிமல் 13 ரன்னுடனும், டிக்வெல்லா 14 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

    தற்போது வரை இலங்கை 7 ரன்கள் மட்டுமே பின்தங்கிய நிலையில் உள்ளது. நாளைய ஆட்டத்தின்போது இலங்கை அணி இந்தியாவை விட கூடுதலா 150 ரன்கள் எடுத்தால் இந்தியாவிற்கு பெரிய சவாலாக இருக்கும்.
    Next Story
    ×