search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒக்கி புயல்: குஜராத்தில் நாளை இரவு கரையை கடக்கிறது
    X

    ஒக்கி புயல்: குஜராத்தில் நாளை இரவு கரையை கடக்கிறது

    ஒக்கி புயல் தெற்கு குஜராத்-வடக்கு மராட்டியம் இடையே உள்ள பகுதியில் சூரத் அருகே நாளை நள்ளிரவு கரையை கடக்கும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

    புதுடெல்லி:

    குமரிக்கடலில் கடந்த 30-ந்தேதி உருவான ஒக்கி புயல் குமரி மாவட்டத்தையும் கேரள கடற்கரை பகுதியையும் புரட்டிப் போட்டு கடும் சேதத்தை ஏற்படுத்தியது.

    பின்னர் ஒக்கி புயல் தென்கிழக்கு அரபிக்கடலில் லட்சத்தீவை கடந்து சென்றது. அது தொடர்ந்து வடக்கு-வட மேற்கு திசையில் குஜராத்தை நோக்கி மணிக்கு 16 கி.மீ வேகத்தில் நகர்ந்து செல்கிறது.

    நேற்று இரவு இந்த அதிதீவிர ஒக்கி புயல் கிழக்கு மத்திய மற்றும் அதனையொட்டியுள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் அமினி தீவில் இருந்து 480 கி.மீ மேற்கு-வடமேற்கு திசையிலும் மும்பைக்கு தெற்கு-தென்மேற்கு திசையில் 820 கி.மீ தொலைவிலும் குஜராத்தின் சூரத்தில் இருந்து தெற்கு-தென்மேற்கில் 1020 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டு இருந்தது.

    நாளை இந்த புயல் ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக மாறுகிறது. தொடர்ந்து தெற்கு குஜராத்-வடக்கு மராட்டியம் இடையே உள்ள பகுதியில் சூரத் அருகே நாளை நள்ளிரவு கரையை கடக்கும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

    மணிக்கு 55 முதல் 65 கி.மீ வேகத்தில் சூறை காற்றுடன் புயல் நெருங்குவதால் கடலில் சீற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே குஜராத், மராட்டியம், கோவா, வட கர்நாடக மாநில மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    நாளை முதல் குஜராத், வடக்கு மராட்டியம் ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்யும். புயல் கரையை கடந்த பின்பு வடகிழக்கு திசையில் சுழன்று படிப்படியாக வலு இழக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×