search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சசிகலா அ.தி.மு.க. அமைச்சர் வீட்டுக்கு சென்று வந்தார்: ரூபா அறிக்கையில் புதிய தகவல்
    X

    சசிகலா அ.தி.மு.க. அமைச்சர் வீட்டுக்கு சென்று வந்தார்: ரூபா அறிக்கையில் புதிய தகவல்

    பெங்களூர் சிறையில் இருந்து வெளியேறி சசிகலா அ.தி.மு.க. அமைச்சர் வீட்டுக்கு சென்று வந்தார் என ரூபா தாக்கல் செய்துள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    பெங்களூர்:

    சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு விதியை மீறி சிறப்பு சலுகைகள் அளிக்கப்பட்டதாக டி.ஐ.ஜி. ரூபா பரபரப்பு விசாரணை அறிக்கை வெளியிட்டார்.

    சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதிகள், தனி சமையல் கூடம், டி.வி., கட்டில், மெத்தை என வழங்கப்பட்டதாக குறிப்பிட்டு இருந்தார்.

    இதற்காக கர்நாடக சிறைத்துறை டி.ஜி.பி. சத்திய நாராயணா ரூ.2 கோடி லஞ்சம் பெற்றார் என்றும் டி.ஐ.ஜி. ரூபா குற்றம் சாட்டினர்.

    சிறையில் சசிகலாவுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் தொடர்பாக விசாரணை நடத்திய அதிகாரி முன் டி.ஐ.ஜி. ரூபா புதிய ஆதாரங்களை சமர்ப்பித்தார். அதில் சசிகலா சிறையில் இருந்து சல்வார் கமீஸ் உடை அணிந்து கையில் பையுடன் சென்று வரும் வீடியோ இடம் பெற்று இருந்தது. இது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சசிகலா சிறையில் இருந்து வெளியில் எங்கும் செல்லவில்லை. வக்கீல்களை சந்திக்கவே பார்வையாளர் அறைக்கு சென்றார். அதைத் தான் திரித்துக் கூறுவதாக சசிகலா ஆதரவாளர்கள் மறுப்பு தெரிவித்தனர்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சசிகலா ஜெயிலில் இருந்து வெளியேறி ஜெயிலுக்கு அருகில் இருக்கும் ஓசூர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வீட்டுக்கு சென்று வந்திருக்கலாம் என்று தனக்கு நம்பத்தகுந்த தகவல் கிடைத்து இருப்பதாக ரூபா தெரிவித்துள்ளார். இதை அவர் கடந்த சனிக்கிழமை சமர்பித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


    ஜெயில் நுழைவு வாயிலில் 1-வது கேட்டுக்கும், 2-வது கேட்டுக்கும் இடையில் உள்ள கண்காணிப்பு காமிராக்களில் சசிகலா வெளியில் சென்று வரும் காட்சிகள் பதிவாகி இருப்பதாகவும், இதன் மூலம் சசிகலா ஜெயில் அருகில் உள்ள ஓசூர் எம்.எல்.ஏ. வீட்டுக்குத்தான் சென்றிருப்பார் என்றும் ரூபா குறிப்பிட்டுள்ளார். இது பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்றும் ரூபா கோரிக்கை விடுத்துள்ளார்.

    தற்போது தமிழக அமைச்சரவையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை மந்திரியாக இருக்கும் பாலகிருஷ்ண ரெட்டிதான் ஓசூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு பெங்களூர் ஜெயில் அருகில் உள்ள பகுதியில் வீடு இருப்பதாகவும், அவரது வீட்டுக்குத் தான் சசிகலா சென்று வந்ததாகவும் கூறப்படுகிறது. ரூபாவின் புதிய குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இது போல் டி.ஐ.ஜி. ரூபா புதிய சர்ச்சையையும் கிளப்பி உள்ளார். கர்நாடக ஜெயில்களில் உள்ள கைதிகள் அனைவரும் சிறைக் கைதிகளுக்கான உடைகள்தான் அணிந்து உள்ளனர். சசிகலாவும், இளவரசியும் கைதிகள்தான் அவர்களுக்கு மட்டும்சேலை, சல்வார் கமீஸ் போன்ற சொந்த உடைகள் அணிய அனுமதித்தது ஏன் என்றும், ஜெயிலில் அவர்களுக்கு ‘ஏ’ கிளாஸ் வசதிகள் மற்றும் தனி உணவுகள் வழங்கியது ஏன் என்றும் விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
    Next Story
    ×