search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் தீபாராதனை நடந்தபோது எடுத்த படம்.
    X
    சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் தீபாராதனை நடந்தபோது எடுத்த படம்.

    திருச்செந்தூரில் சுவாமி குமரவிடங்க பெருமான் - தெய்வானை அம்பாள் திருக்கல்யாணம்

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழாவில் சுவாமி குமரவிடங்க பெருமான்- தெய்வானை அம்பாள் திருக்கல்யாணம் நடந்தது.
    அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 20-ந்தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. 6-ம் திருநாளான நேற்று முன்தினம் மாலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடந்தது.

    இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 7-ம் திருநாளான நேற்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தெய்வானை அம்பாள் தபசு காட்சிக்கு புறப்பட்டு, தெப்பக்குளம் அருகில் உள்ள தபசு காட்சி மண்டபத்தில் எழுந்தருளினார்.

    மாலையில் சுவாமி குமரவிடங்க பெருமான் தங்க மயில் வாகனத்தில் கோவிலில் இருந்து புறப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக தபசு காட்சி மண்டபத்துக்கு வந்து, தெய்வானை அம்பாளுக்கு காட்சி கொடுத்தார். தொடர்ந்து சுவாமி- அம்பாளுக்கு தீபாராதனை நடந்தது.



    பின்னர் தெற்கு ரத வீதி, மேல ரத வீதி, சந்திப்பில் சுவாமி- அம்பாள் எழுந்தருளினர். தெற்கு ரத வீதியில் நின்ற சுவாமி குமரவிடங்க பெருமானை தெய்வானை அம்பாள் மூன்று முறை சுற்றி வந்தார். பின்னர் சுவாமி குமரவிடங்க பெருமான்- தெய்வானை அம்பாள் தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. சுவாமி- அம்பாளுக்கு பட்டாடைகள் மாற்றப்பட்டன. தொடர்ந்து சுவாமிக்கு தீபாராதனையான பின்னர் அம்பாளுக்கும் தீபாராதனை நடந்தது.

    பின்னர் சுவாமி- அம்பாள் கோவிலை சென்றடைந்தனர். இரவில் ராஜகோபுர திருக்கல்யாண மண்டபத்தில் சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் வைதீக முறைப்படி திருக்கல்யாணம் நடந்தது.

    விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு மஞ்சள் கயிறு, குங்குமம் உள்ளிட்ட மங்கள பொருட்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது.
    Next Story
    ×