search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மயிலாடுதுறையில் மகாபுஷ்கர விழா: 1½ லட்சம் பக்தர்கள் புனித நீராடி வழிபாடு
    X

    மயிலாடுதுறையில் மகாபுஷ்கர விழா: 1½ லட்சம் பக்தர்கள் புனித நீராடி வழிபாடு

    மயிலாடுதுறையில் கடந்த 12-ம் தேதி தொடங்கிய காவிரி மகாபுஷ்கர விழாவில் இதுவரை 1½ லட்சம் பக்தர்கள் புனித நீராடி வழிபாடு செய்துள்ளனர்.
    மயிலாடுதுறை:

    இந்தியாவில் உள்ள கங்கை, நர்மதை, சரஸ்வதி, யமுனை, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, தாமிரபரணி, சிந்து, துங்கபத்ரா, பிரம்மபுத்ரா, பரணிதா என்ற 12 புண்ணிய நதிகளிலும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை புஷ்கர விழா கொண்டாடப்படுகிறது.

    ஒவ்வொரு ராசிக்கும் ஒரு நதி என 12 ராசிகளுக்கும் 12 நதிகள் புஷ்கர நதிகளாக கூறப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் குருபகவான் எந்த ராசியில் பிரவேசிக்கிறாரோ, அந்த ஆண்டு அந்த ராசிக்கான நதிகளில் புஷ்கர விழா நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு குருபகவான் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பிரவேசித்தார். அதைத்தொடர்ந்து துலாம் ராசிக்குரிய காவிரி ஆற்றில் புஷ்கர விழா கொண்டாடப்படுகிறது.

    தற்போது இந்த ஆண்டு புஷ்கர விழா காவிரியில் 144 ஆண்டுகளுக்குப்பிறகு வருவதால் மகா புஷ்கர விழா என்ற பெயரில் காவிரி உற்பத்தியாகும் குடகுமலை முதல் கடலில் சங்கமிக்கும் பூம்புகார் வரையிலும் உள்ள முக்கிய இடங்களில் கொண்டாடப்படுகிறது. வரலாற்று சிறப்பு மிக்க காவிரி மகா புஷ்கர விழா நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள காவிரி துலா கட்டத்தில் கடந்த 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 24-ந்தேதி வரை இந்த விழா நடைபெறுகிறது.

    தொடக்கநாளில் காஞ்சி சங்கராச்சாரியார்கள் மற்றும் ஆதீனங்கள், மடாதிபதிகள் புனித நீராடி விழாவை தொடங்கி வைத்தனர். அதைத்தொடர்ந்து தினமும் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி வருகிறார்கள். மேலும் இந்த விழாவையொட்டி பல்வேறு சிறப்பு பூஜைகளும் நடைபெற்று வருகின்றன.

    நேற்று சனிக்கிழமை விடுமுறை தினம் என்பதால் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது. தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மயிலாடுதுறை துலாகட்டத்திற்கு வந்து முன்னோர்களுக்கு திதி கொடுத்து புனித நீராடினர்.

    விழா காலங்களில் தினமும் காலை துலாகட்டத்தின் வடகரையில் சிதம்பரம் தியாகப்பா, சிவராமதீட்சிதர்கள் தலைமையில் சிறப்பு யாகங்கள் நடைபெற்று வருகின்றன. அதன்படி நேற்று நோய்கள் நீக்கும் மகா சுதர்ஷன யாகம் நடத்தப்பட்டது. பின்னர் அன்னபூர்ணேஸ்வரர்- அன்னபூர்ணேஸ்வரிக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. காவிரி ஆற்றின் தென்கரையில் அரசமரத்தடியில் உள்ள காவிரி தாய்சிலைக்கு பாலாபிஷேகமும் நடந்தது.

    மேலும் மகாளய அமாவாசை அன்று பக்தர்கள் அதிக அளவில் புனித நீராடுவார்கள் என கூறப்படுகிறது.

    மகாபுஷ்கர விழா தொடங்கிய கடந்த 12-ந்தேதி முதல் நேற்று வரை கடந்த 5 நாட்களில் மட்டும் 1½ லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடியதாக விழாக்குழுவினர் தெரிவித்தனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை தினம் என்பதால் புனித நீராட வரும் பக்தர்களின் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    முன்னதாக நேற்று மயிலாடுதுறை துலாகட்ட வடகரையில் தருமபுரம் ஆதீனத்துக்கு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தருமபுரம் ஆதீனம் சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளின் பாதங்களுக்கு இளைய சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் புஷ்பாஞ்சலி செய்து பொற்காசு களால் சொர்ணாபிஷேகம் செய்தார்.

    தொடர்ந்து காவிரி மகாபுஷ்கர விழா குழு தலைவர் ராமானந்தா மகராஜ், விழா ஒருங்கிணைப்பாளர் சென்னை மகாலட்சுமி மற்றும் விழாக்குழுவினர், பக்தர்கள் தருமபுரம் ஆதீனத்திற்கு பாத பூஜை செய்து ஆசி பெற்றனர்.  
    Next Story
    ×