search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஏரி காத்த ராமர் கோவில் - மதுராந்தகம்
    X

    ஏரி காத்த ராமர் கோவில் - மதுராந்தகம்

    சென்னை - திருச்சி ஜி.எஸ்.டி தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டிலிருந்து சுமார் 28 கி.மீ. தொலைவில் உள்ளது ஏரி காத்த ராமர் கோவில்.
    கடவுளை பார்க்க முடியுமா.? சமீபகாலத்தில் கடவுளை கண்டவர்கள் யாராவது இருக்கிறார்களா..? பலரது மனதிலும் இந்த கேள்விகள் அவ்வப்போது எழுவதுண்டு. புராண காலங்களில் முனிவர்கள் கடுமையாக தவம் இருந்து கடவுளை கண்டதாக படித்திருக்கிறோம். கடவுளின் குரல் அசரீரியாக ஒலித்து பல விஷயங்களை தெரிவித்ததாகவும் புராணங்கள் சொல்கின்றன. இன்றைய நிலையில் அவை கதைகளாகத்தான் பார்க்கப்படுகின்றன.

    உண்மையில் கடவுளை காண முடியுமா..? அப்படி கண்டவர்கள் யாராவது இருக்கிறார்களா..? என்ற கேள்விக்கு, ஆமாம், இருக்கிறார் என்பது பதிலாக உள்ளது. அவர் கடவுளை கண்ட சம்பவத்தை, கல்வெட்டில் பதிவாகவும் அமைத்திருக்கிறார்கள். இது 1825-ம் ஆண்டில் கிழக்கு இந்திய கம்பெனியின் செங்கல்பட்டு கலெக்டராக இருந்த கர்னல் லியோனல் பிளேஸ் என்பவருக்கு நடந்தது.

    மதுராந்தகம் ஏரி முற்காலத்தில் அதனைச் சுற்றி உள்ள சிறிய மற்றும் பெரிய கிராமங்களின் விவசாய நிலத்திற்கான பாசனத்திற்கு மட்டுமல்லாமல், குடி நீராகவும் பயன்பட்டு வந்தது. மழை நீரை தேக்கிவைக்கும் இந்த ஏரியில், பெருமழை பெய்யும் சமயங்களில் அதிகப்படியான நீர்வரத்து காரணமாக உடைப்பு ஏற்பட்டு விளை நிலங்கள் பாதிக்கப்படுவது வழக்கம்.

    ஒரு முரை தொடர்ச்சியான மழை காரணமாக ஏரி விரைவாக நிரம்பியது. அதிகப்படியான நீர் நிரம்பிய காரணத்தால் இன்னும் சில தினங்களில் கரைகள் உடைய வாய்ப்புள்ளதாக செய்தி பரவியது. அவ்வாறு கரை உடைந்தால் வெள்ள நீர் ஊருக்குள் வருவதோடு, விளை நிலங்களும் பாதிக்கப்படலாம் என்ற பயம் மக்கள் மத்தியில் நிலவியது. அப்போதைய கலெக்டர் என்ற நிலையில் லியோனல் பிளேஸ் ஏரியின் கரையை பலப்படுத்த முயற்சி எடுக்க வேண்டி அந்த பகுதிக்கு வருகை புரிந்தார்.

    அப்போது அங்குள்ள ஏரி காத்த ராமர் கோவிலுக்கும் வந்தார். அப்போது, அர்ச்சகர்கள் சிதிலமுற்றிருந்த தாயார் சன்னிதியை திருப்பணி செய்து தரும்படி அவரிடம் கேட்டுக்கொண்டனர். அதற்கு பதிலாக அவர், ‘உங்கள் தெய்வத்தின் அருளால் இந்த மழையின் காரணமாக ஏரி உடையாமல் இருக்கட்டும். அப்படி நடந்தால், நான் திருப்பணியை செய்து தரு கிறேன்..’ என்று அவர்களிடம் தெரிவித்தார்.

    அடுத்த ஓரிரு நாட்கள் பெய்த தொடர் மழை காரணமாக நீர் வரத்து அதிகமாகிவிட்டது. அந்த சமயத்தில் ஒரு நாள் நள்ளிரவு நேரத்தில் மழை அதி தீவிரமாக பெய்யும் நிலையில், நிச்சயம் ஏரியின் கரை உடைந்து விடும் என்று நினைத்த அவர், நிலைமையை நேரில் சென்று பார்த்து, மேலதிகாரிக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்று, தனி ஆளாகவே கையில் ஒரு குடையுடன் ஏரியை நோக்கி துணிச்சலுடன் சென்றார்.



    பெய்யும் இந்த கனமழைக்கு நிச்சயம் ஏரியின் கரைஉடைந்து இருக்கும் என்று நினைத்த அவர், மெல்ல சிரமப்பட்டு கரையின் மீது ஒரு புறமாக ஏறி நின்று பார்த்தார். வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்து, சுற்றிலும் ஒரே இருட்டாக இருந்தது. கையில் உள்ள விளக்கு வெளிச்சத்தில் அவருக்கு ஒன்றுமே தெரியவில்லை. சற்று நேரம் அப்படியே நின்று பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென்று ஒரு மின்னல் தோன்றியது. 

    அந்த மின்னல் வெளிச்சத்தில் அவரது கண்களில் அந்த காட்சி தெரிந்தது. அங்குள்ள ஏரியின் கரை மீது உயரமான இரண்டு இளைஞர்கள் நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் முகம் அந்த மின்னல் ஒளியில் அழகாக தென்பட்டது. இருவர் கைகளிலும் வில், அம்பு வைத்திருந்தார்கள். ஏரியை உற்று நோக்கியவாறே, எதிரும் புதிருமாக அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தார்கள். ஒரு சில கணங்கள் மட்டுமே அந்தக் காட்சியை கண்டார். அடுத்த சில நொடிகளில் அவர்கள் மறைந்து விட்டார்கள். அவரது மனதில் ஆச்சரியமும், குழப்பமும் ஏற்பட்ட நிலையில் தனது இல்லத்துக்கு திரும்பி விட்டார்.

    மறுநாள் பொழுது புலர்ந்தது. வெள்ளம் வடிந்திருந்தது. பெருமழை பெய்த அறிகுறிகள் அவ்வளவாக தென்படாமல் வழக்கம் போல் ஏரி அமைதியாக இருந்தது, ஏரிக்கு சென்று அதைப் பார்த்துச் சிலிர்த்த அந்த ஆங்கிலேய அதிகாரி நடந்த சம்பவத்தை மக்களுக்கு ஆச்சரியத்துடன் சொன்னார். அவர் சொன்னபடி ஜனகவல்லி தாயாருக்கு சன்னிதியை புதிதாக அமைத்து கொடுத்ததுடன், பல திருப்பணிகளையும் அந்த ஆலயத்திற்கு செய்தார்.

    நடந்த சம்பவம் அந்த ஆலய கல்வெட்டிலும் பதிவு செய்து வைக்கப்பட்டது. ‘இந்த தர்மம் கும்பினி ஜாகிர் கலெக்டர் லியோனல் பிளேஸ் துரை அவர்களது’ என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டை இன்றும் பார்க்க முடியும். மேற்கண்ட சம்பவத்தினால் மதுராந்தகம் ராமர் கோவில் ‘ஏரி காத்த ராமர் கோவில்’ என்று அழைக்கப்படுகிறது.

    சென்னை-திருச்சி ஜி.எஸ்.டி தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டிலிருந்து சுமார் 28 கி.மீ. தொலைவில் ஏரி காத்த ராமர் கோவில் உள்ளது. மகிழ மரங்கள் (வகுளம் என்றும் குறிப்பிடப்படும்) அதிகம் இருந்த காரணத்தால் ‘வகுளாரண்ய ஷேத்திரம்’ என்றும் அதற்கு பெயர் உண்டு. அந்தப் பகுதியை ஆட்சிபுரிந்த மதுராந்தக சோழன் நினைவாக அந்தப்பகுதி ‘மதுராந்தகம்’ என்றும், கல்வெட்டுக்களில் ‘மதுராந்தக சதுர்வேதி மங்களம்’ என்றும் குறிப்பிடப்படுகிறது.

    சீதையை மீட்க செல்லும் வழியில், ராமபிரான் விபண்டக மகரிஷி ஆசிரமத்தில் தங்கி, அவர் உபசரிப்பை ஏற்றுக்கொண்டு, அவரது வேண்டுதலுக்கேற்ப அயோத்தி திரும்பும் வழியில் சீதையுடன் திருமண கோலத்தில் இங்கு காட்சி தந்தார். அதன் அடிப்படையில் புஷ்பக விமானத்துடன் கோதண்ட ராமர் கோவில் அங்கே அமைக்கப்பட்டது.
    Next Story
    ×