search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பாவங்கள் போக்கும் சாம சாமவேதீஸ்வரர் கோவில்
    X

    பாவங்கள் போக்கும் சாம சாமவேதீஸ்வரர் கோவில்

    திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ளது அருள்மிகு சாமவேதீஸ்வரர் ஆலயம். இந்த ஆலயத்தின் வரலாற்றை இப்போது அறிந்து கொள்ளலாம்.
    திருச்சி மாவட்டம் லால்குடியில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருமங்கலம் என்ற தலம். பசுமைச் சூழலில் அமைதியே உருவாக அமைந்துள்ள இந்த ஊரில் உள்ளது அருள்மிகு சாமவேதீஸ்வரர் ஆலயம். இறைவியின் பெயர் உலக நாயகி. இறைவன் பெயர் சாமவேதீஸ்வரர். ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.

    ஆலய அமைப்பு :

    அழகிய ராஜகோபுரத்தைக் கடந்தவுடன் விசாலமான பிரகாரம் உள்ளது. அங்கே கொடி மர விநாயகர் தனி மண்டபத்தில் அருள் பாலிக்கிறார். அடுத்து கொடி மரம், நந்தி, பலிபீடம் ஆகியவை உள்ளன. அடுத்துள்ளது சிறப்பு மண்டபம். இந்த மண்டபத்தில் வலதுபுறம் இறைவி உலக நாயகி அம்பாள் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள். இறைவியின் அர்த்த மண்டப நுழைவாயிலில் துவாரபாலகிகளின் சுதை வடிவ திருமேனிகள் அழகாய் அமைந்துள்ளன.

    மகாமண்டபத்தில் நந்தியும், பலபீடமும் இருக்க அடுத்து அர்த்தமண்டபம் உள்ளது. இதன் வலது புறம் சண்டிகேசுவரரின் திருமேனி உள்ளது. அடுத்துள்ள கருவறையில் இறைவன் சாமவேதீஸ்வரர் லிங்கத் திருமேனியில் அருள்பாலிக்கிறார். இறைவனின் தேவகோட்டத்தில் தென் திசையில் பிச்சாடனார், தட்சிணாமூர்த்தி, உதங்க முனிவர் ஆகியோரும், கீழ் திசையில் சங்கரநாராயணன் மற்றும் வடதிசையில் பிரம்மாவும், விஷ்ணு துர்க்கையும் அருள்பாலிக்கின்றனர்.

    பிரகாரத்தின் தென் திசையில் பரசுராமர் பூஜை செய்த லிங்கமும், கிழக்கு பிரகாரத்தில் வள்ளி– தெய்வானை சமேத முருகப்பெருமான், மகாலட்சுமி, ஆணய நாயனாருக்கு முக்தி கொடுத்த சிவலிங்கமும் உள்ளது. வடக்குப் பிரகாரத்தில் அப்பர், சம்பந்தர், ஆணய நாயனார், பாணலிங்கம், சண்டிகேஸ்வரர் ஆகியோர் திருமேனிகள் வீற்றிருக்கின்றன. ஆணய நாயனாருக்கு முக்தி கொடுத்த அம்மனின் சன்னிதியும் இங்கு உள்ளது. சண்டிகேசுவரர் தனி சன்னிதியில் வடக்கு பிரகாரத்தில் வீற்றிருக்கிறார். கிழக்கு பிரகாரத்தில் பைரவர், காலபைரவர், சூரியன், சனீஸ்வரன் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். பிரகாரத்தின் வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்கள் உள்ளனர்.

    ஆலயச் சிறப்பு :

    பரசுராமர் தனது தாயைக் கொன்றதால் மாத்ருஹத்தி எனும் தோஷம் நீங்க இத்தலத்து இறைவனை வழிபட்டார். அவரது தோஷம் நீங்கியது. இதனால் இங்குள்ள தீர்த்தம் பரசுராம தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. அத்துடன் இந்த ஊருக்கு பரசுராமேஸ்வரம் என்ற பெயரும் உண்டு. சண்டிகேசுவரர் தனது தந்தையைக் கொன்றதால் ஏற்பட்ட பித்ருஹத்தி தோஷம் நீங்க பல ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டார். அவரைப் பற்றிய தோஷம் நீங்கவில்லை. இறைவன் இத்தலத்தில் வந்து தன்னை வணங்கும்படி கூற சண்டிகேசுவரரும் இறைவனின் சன்னிதியின் இடது புறம் இருந்து இறைவனை வணங்கினார். அவரது தோஷம் விலகி இறைவனடி சேர்ந்தார். இறைவனின் அர்த்தமண்டப நுழைவு வாசலில் சண்டி கேசுவரரின் திருமேனியை நாம் காணலாம். இது வேறு எந்த ஆலயத்திலும் இல்லாத சிறப்பம்சம் ஆகும்.

    இங்கு கிழக்கு பிரகாரத்தில் தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கும் முருகப்பெருமானுக்கு, ஆறுமுகமும் 12 கரங்களும் இல்லை. மாறாக ஆறு முகமும் நான்கு கைகளுமாக பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

    தவிர முருகன் வள்ளியை மணந்தபின் இத்தலம் வந்ததால் முருகனும் தேவசேனாவும் நின்ற கோலத்தில் அருள்பாலிக்க, வள்ளி மட்டும் மயிலின் மேல் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவது ஓர் அற்புத காட்சியாகும்.

    இங்கு அருள்பாலிக்கும் தட்சிணாமூர்த்தி வழக்கம் போல் சின்முத்திரை காட்டாமல் அபய முத்திரை காட்டுகிறார். இது ஓர் அபூர்வ அமைப்பு என்கின்றனர் பக்தர்கள். இதனால் தன்னை வணங்கும் பக்தர்களுக்கு இறைவன் தோஷ நிவர்த்தி தருவதுடன் கல்வி செல்வத்தையும் வாரி வழங்குகிறார் என பக்தர்கள் நம்புகின்றனர்.

    சனிபகவான் :

    சனி பகவானின் வாகனம் காகம். பொதுவாக காகம் தெற்கு நோக்கி இருப்பது வழக்கம். ஆனால் இங்குள்ள சனி பகவானின் வாகனம் வடக்கு திசை நோக்கி அமைந்திருப்பது ஓர் அபூர்வ அமைப்பாகும். சனி பெயர்ச்சியின் போது இங்குள்ள சனி பகவானுக்கு விசேஷ பூஜைகளும் ஆராதனைகளும் நடைபெறும். ஜென்ம சனி, பாத சனி, அஷ்டமசனி ஆகியவை சனிபகவானை வழிபடுவதால் விலகி ஓடும் என்பது அனைவரும் அறிந்த நிஜம்.

    இந்த ஆலயத்தில் பைரவரும், கால பைரவரும் சேர்ந்து இருப்பது ஓர் அற்புதமான அமைப்பாகும். அர்த்தஜாம பூஜையின் போது பைரவர் பாதத்தில் வைத்த விபூதியை பூசுவதால் சகலவிதமான பில்லி சூன்யம் நோய்களும் குணமாகும் என கூறுகின்றனர் பக்தர்கள்.

    அறுபத்தி மூன்று நாயன்மார்களில் 14–வது நாயன்மார் ஆணய நாயனார். அவர் அவதரித்த தலம் இது. இவர் கார்த்திகை மாதம் ஹஸ்த நட்சத்திரத்தில் இறைவனுடன் இரண்டற கலந்தார்.

    அந்த நாளை அவரது குருபூஜை நாளாக இந்த ஆலயத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடுகின்றனர். ஆணய நாயனாருக்கு முக்தி கொடுத்த சிவலிங்கமும், அம்மனும் இங்கு தனித் தனியே அருள்பாலிக்கின்றனர். ஆலயத்தின் தல விருட்சம் பலாமரம்.

    பக்தியின் பலன் :

    மகம் நட்சத்திரத்தன்றும் சனிக்கிழமையன்றும் இக்கோவிலை 11 முறை வலம் வந்து, தேனில் ஊறிய பலாச் சுளைகளை தானம் செய்தால் நீண்ட ஆயுளைப் பெறலாம் என்பது இந்த ஊர் மக்கள் சொல்லும் நம்பிக்கையான செய்தி.

    நம்மை பாதித்துள்ள தோஷங்களும், பாவங்களும் நீங்க நாமும் ஒரு முறை திருமங்கலம் சென்று வரலாமே!
    Next Story
    ×