என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகாராஷ்டிரா"

    • அங்கிருந்தவர்களின் நகைகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருடினர்.
    • திருடப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் 30 லட்சம் ரூபாய் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

    மகாராஷ்டிரா துணை முதல்வராக இருந்த அஜித் பவார் கடந்த ஜனவரி 28 அன்று நடந்த விமான விபத்தில் உயிரிழந்தார்.

    அவரின் இறுதிச் சடங்கு கடந்த வியாழக்கிழமை பாராமதியில் உள்ள வித்யா பிரதிஷ்டான் மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் பங்கேற்றனர்.

    அதிக கூட்டத்தை பயன்படுத்திக் கொண்ட திருடர்கள், அங்கிருந்தவர்களின் நகைகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருடினர்.

    இறுதிச் சடங்குகள் முடிந்த பிறகு, சுமார் 15 பேர் தங்கள் தங்கச் சங்கிலிகள் மற்றும் பொருட்கள் திருடு போனதாகப் போலீசில் புகார் அளித்தனர்.

    திருடப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் 30 லட்சம் ரூபாய் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

    இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், இன்று (செவ்வாய்க்கிழமை) இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய 7 சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளனர்.

    அவர்களின் வாக்குமூலம் அடிப்படையில் திருடப்பட்ட பொருட்களை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.  

    • அஜித் பவார் மீண்டும் சரத் பவாருடன் இணையத் திட்டமிட்டிருந்தார்.
    • கடைசி நேரத்தில் விமானி மாற்றப்பட்டது ஏன்?

    மகாராஷ்டிர துணை முதல்வராக இருந்த அஜித் பவார், ஜனவரி 28 அன்று காலை புனேவில் உள்ள தனது சொந்த தொகுதியான பாராமதிக்கு உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்திற்கு சென்றபோது அவரின் தனிவிமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

    இதில் அஜித் பவார் உட்பட விமானத்தில் இருந்த அவரது பாதுகாவலர், 2 விமானிகள், விமான பணிப்பெண் என 5 பேர் உயிரிழந்தனர். அஜித் பவாரின் துணை முதல்வர் பதவி அவரின் மனைவி சுனேத்ரா பவாருக்கு வழங்கப்பட்டது.

    நடப்பு உள்ளாட்சி தேர்தலில் அஜித் பவரின் தேசியவாத காங்கிரஸ், பல இடங்களில் எதிரணியில் உள்ள சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்தது. எனவே பிரசாரங்களில் அஜித் பவார் தான் அங்கம் வகிக்கும் பாஜக கூட்டணியை எதிர்த்தே பேசி வந்தார். பாஜக உள்ளாட்சிகளில் ஊழல் செய்வதாக அஜித் பவார் பேசி வந்தார்.

    இந்த நிலையில் அஜித் பவாரின் மரணத்தில் எதிர்க்கட்சிகள் சந்தேகம் கிளப்பியுள்ளன. விபத்து நடந்த அன்றே மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இந்த விபத்தில் மர்மம் இருப்பதாக சந்தேகம் எழுப்பினார்.

     உத்தவ் சிவசேனா எம்பி சஞ்சய் ராவத், அஜித் பவார் மரணத்தில் மர்மம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    சஞ்சய் ராவத் கூறுகையில், "பாஜகவின் ஊழல்கள் குறித்த ஒரு ரகசிய கோப்பு தன்னிடம் இருப்பதாக ஜனவரி 15 அன்று அஜித் பவார் தெரிவித்திருந்தார். அதை வெளியிடப்போவதாகவும் கூறியிருந்தார். அவர் பேசிய 10 நாட்களுக்குள் இந்த விபத்து நடந்துள்ளது" என்று தெரிவித்தார்.

    மேலும், அஜித் பவார் மீண்டும் சரத் பவாருடன் இணையத் திட்டமிட்டிருந்ததாகவும், இது பாஜகவுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதால் இந்தச் சதி நடந்திருக்கலாம் என்றும் அவர் கூறினார்.

    விபத்தில் சிக்கிய அந்த விமானத்திற்கு முறையான பராமரிப்பு சான்றிதழ் இல்லை. கடைசி நேரத்தில் விமானி மாற்றப்பட்டது ஏன்? என இதுபோன்ற பல குழப்பங்கள் நிலவுவதாக சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் அமோல் மித்காரியும் பேசியுள்ளார்.

    காங்கிரஸ் தலைவர் விஜய் வடேட்டிவார் கூறுகையில், "அஜித் பவாரின் உடல் அடக்கம் கூட இன்னும் முழுமையாக முடிவடையவில்லை, ஆனால் அதற்குள் அவரது மனைவி சுநேத்ரா பவார் துணை முதல்வராகப் பதவி ஏற்றுக்கொண்டார். அனைவருக்கும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதிலேயே அவசரம் இருந்தது. மகாராஷ்டிராவின் 80 சதவீத மக்கள் இந்த மரணத்தில் மர்மம் இருப்பதாகவே நம்புகின்றனர்" என்று தெரிவித்துள்ளார்.

    சரத் பவார் இதனை ஒரு விபத்து என்று கூறினாலும், மற்ற எதிர்க்கட்சிகள் இதனை ஒரு பெரிய அரசியல் சதியாகவே பார்க்கின்றன. இது குறித்து உயர்மட்ட விசாரணை தேவை எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.  

    • மகாராஷ்டிரா பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி, இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது.
    • கணேஷ் அளித்த ஆலோசனையின்படி, தனது மூன்றாவது மகளான பிராச்சியை கொலை செய்ய பாண்டுரங் முடிவு செய்தார்

    மகாராஷ்டிராவின் நாந்தேட் மாவட்டம் கேரூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டுரங் (28).

    முடிதிருத்தும் நிலையம் வைத்து நடத்தி வரும் இவருக்கு இவருக்கு ஒரு மகன் மற்றும் 6 வயதில் இரட்டை பெண் குழந்தைகள் உள்ளனர்.

    வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள கிராம பஞ்சாயத்துத் தேர்தலில் பாண்டுரங் போட்டியிட விரும்பினார்.

    ஆனால், மகாராஷ்டிரா பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி, இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது.

    இதை அறிந்த பாண்டுரங், தனது நண்பரும் தற்போதைய கிராம பஞ்சாயத்துத் தலைவருமான கணேஷ் ஷிண்டே என்பவரிடம் ஆலோசனை கேட்டுள்ளார்.

    கணேஷ் அளித்த ஆலோசனையின்படி, தனது மூன்றாவது மகளான பிராச்சியை கொலை செய்ய பாண்டுரங் முடிவு செய்தார்.

    கடந்த ஞாயிற்றுக்கிழமை, மகள் பிராச்சியை பைக்கில் அழைத்துக்கொண்டு தெலுங்கானாவின் நிஜாமாபாத் மாவட்டத்திற்கு பாண்டுரங் சென்றுள்ளார். அங்குள்ள நிஜாம்சாகர் கால்வாயில் மகளை தள்ளிவிட்டு கொலை செய்துள்ளார்.

    கால்வாயில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டதையடுத்து, நிஜாமாபாத் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். சிறுமியின் அடையாளத்தை அறிந்து, மகாராஷ்டிரா சென்று குடும்பத்தினரிடம் விசாரித்துள்ளனர். 

    விசாரணையில் பாண்டுரங் உண்மையை ஒப்புக்கொண்டார்.  பாண்டுரங் மற்றும் சதித் திட்டம் தீட்டிக் கொடுத்த கணேஷ் ஷிண்டே ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

    அரசியல் பதவிக்காகக் பெற்ற மகளையே தந்தை கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.  

    • மேல்சபை எம்.பி.யாக சுனேத்ரா பவார் உள்ளார்.
    • அதேநேரம் அவரது மேல்சபை எம்.பி. பதவியை அவரது மகன் பரத் பெறுகிறார்.

    மராட்டிய மாநில துணை முதல்வராக இருந்த வரும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான அஜித் பவார் கடந்த 28-ந்தேதி விமான விபத்தில் பலியானார்.

    இதைத்தொடர்ந்து பா.ஜ.க-சிவசேனா கூட்டணியில் தேசியவாத காங்கிரசை தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியாக அஜித் பவார் மனைவி சுனேத்ரா பவாருக்கு துணை முதல்வர் பதவி வழங்க முடிவு செய்யப்பட்டது.

    தற்போது மேல்சபை எம்.பி.யாக உள்ள சுனேத்ரா பவார் துணை முதல்வர் பதவிக்கான முன்மொழிவை அவர் ஏற்றுக்கொண்டார்.

    இந்நிலையில் இன்று மாலை 5 மணியளவில் துணை முதல்வராக சுனேத்ரா பவார் பதவியேற்றுக் கொண்டார்.

    மராட்டிய துணை முதல்வராக பதவி ஏற்கும் முதல் பெண் என்ற பெருமையை சுனேத்ரா பவார் பெறுகிறார்.

    62 வயதான சுனேத்ரா பவார் கடந்த பாராளுமன்ற தேர்தலில் பாராமதி தொகுதியில் சுப்ரியா சுலேவிடம் தோற்றார்.

    இதை தொடர்ந்து அவர் மேல்சபை எம்.பி. ஆனார். தற்போது துணை முதல்வர் ஆகியுள்ளார்.

    சுனேத்ரா பவார் துணை முதல்வராக நீடிக்கவேண்டும் என்றால் தற்போது அவர் வகித்து வரும் எம்.பி பதவியை ராஜினாமா செய்துவிட்டு அஜித் பவரின் பாராமதி தொகுதி இடைத்தேர்தலில் வெல்ல வேண்டும். அதேநேரம் அவரது மேல்சபை எம்.பி. பதவியை அவரது மகன் பரத் பெறுகிறார். 

    • விமான நிலையத்தில் இருந்து அருகிலுள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்குச் செல்ல டாக்சியில் ஏறியுள்ளார்.
    • பாதிக்கப்பட்ட பெண் தனது கசப்பான அனுபவத்தை எக்ஸ் தளத்தில் வீடியோவாகப் பதிவிட்டார்.

    மும்பையில் அமெரிக்க பெண்ணிடம் 400 மீட்டர் தூரத்திற்கு ரூ.18,000 வசூல் செய்த டாக்சி டிரைவர் கைது செய்யப்ட்டுள்ளார். 

    பாதிக்கப்பட்ட அர்ஜென்டினா அரியானோ என்ற அமெரிக்கப் பெண், கடந்த ஜனவரி 12-ஆம் தேதி வேலை விஷயமாக மும்பை வந்துள்ளார்.

    விமான நிலையத்தில் இருந்து அருகிலுள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்குச் செல்ல டாக்சியில் ஏறியுள்ளார்.

    ஹோட்டல் மிக அருகிலேயே 400 மீட்டர் தொலைவில் இருந்தபோதிலும், டிரைவர் அந்தப் பெண்ணை அந்தேரி பகுதியில் சுமார் 20 நிமிடங்கள் சுற்றிக் காட்டி, நீண்ட தூரம் அழைத்துச் செல்வது போன்ற பிம்பத்தை ஏற்படுத்தியுள்ளார்.

    இறுதியில் ஹோட்டலில் இறக்கிவிட்ட போது, கட்டணமாக ரூ.18,000 (200 டாலர்) கேட்டு மிரட்டிப் பெற்றுள்ளார்.

    கடந்த ஜனவரி 26-ஆம் தேதி, பாதிக்கப்பட்ட பெண் தனது கசப்பான அனுபவத்தை எக்ஸ் தளத்தில் வீடியோவாகப் பதிவிட்டார்.

    அதில் அந்த டாக்ஸியின் பதிவு எண்ணையும் குறிப்பிட்டிருந்தார். இந்தப் பதிவு வைரலாகி 1 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றது.

    எனவே இந்த பதிவை அடிப்படையாகக் கொண்டு போலீஸார் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தனர். டாக்ஸி எண்ணை வைத்துத் தேடியதில், சஹார் கிராமத்தைச் சேர்ந்த தேஷ்ராஜ் யாதவ் (50) என்ற டிரைவர் பிடிபட்டார்.

    அவர் பயன்படுத்திய டாக்சி பறிமுதல் செய்யப்பட்டு, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

    • தேர்தல் பிரச்சாரத்திற்காக பாராமதி சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
    • இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் இன்று காலை விமான விபத்தில் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.

    இன்று காலை புதன்கிழமை காலை 8.45 மணியளவில் பாராமதி விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறங்க முயன்றபோது, அஜித் பவார் பயணித்த சிறிய ரக விமானம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் அஜித் பவாருடன் சேர்த்து, அவரது பாதுகாவலர் விதீப் யாதவ், விமானப் பணிப்பெண் பிங்கி மாலி, விமானிகள் சுமித் கபூர் மற்றும் ஷாம்பவி பதக் ஆகிய 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

    உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்திற்காக பாராமதி சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

    இந்நிலையில் விமானம் கீழே விழுந்துவெடித்துச் சிதறிய காட்சிகள் வெளியாகி உள்ளன.

    சாலையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான அந்த காட்சியில், விமானம் தரையில் மோதிய அடுத்த நொடியே மிகப்பெரிய அளவில் தீப்பிழம்பு எழுவதும், அந்தப் பகுதி முழுவதும் கரும்புகை சூழ்வதும் வீடியோவில் தெளிவாகத் தெரிகிறது.

    • திடீரெனத் நிலைகுலைந்து கீழே விழுந்தார்.
    • அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

    மகாராஷ்டிராவில் குடியரசு தின விழாவில் தேசியக் கொடிக்கு மரியாதை செய்தபோது மாரடைப்பு ஏற்பட்டு போலீஸ் அதிகாரி உயிரிழந்த வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    மகாராஷ்டிராவின் தாராஷிவ் மாவட்டத்தில் உள்ள உமர்கா நகரில் நேற்று குடியரசு தின விழாவில் கொடியேற்ற நிகழ்வில் மாநில கலால் துறையில் பணிபுரிந்து வந்த காவல் துணை ஆய்வாளர் மோகன் ஜாதவ் பங்கேற்றார்.

    தேசியக் கொடி ஏற்றப்பட்ட போது, சக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுடன் வரிசையில் மோகன் ஜாதவ் நின்றுகொண்டிருந்தார். அப்போது அவருக்குத் திடீரெனத் நிலைகுலைந்து கீழே விழுந்தார். கீழே விழுந்ததில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    உடனடியாக அவரை மீட்ட சக ஊழியர்கள் உமர்காவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

    ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

    முதற்கட்ட பரிசோதனையில் அவருக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பே மரணத்திற்குத் தார்மீகக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.

    விழாவின் போது அவர் நிலைகுலைந்து விழும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.  

    • சிறிய விஷயத்திற்காக ஏற்பட்ட திடீர் வாக்குவாதம் காரணமாக இந்தத் தாக்குதல் நடந்தது.
    • ரெயிலில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள நேரத்திலேயே இந்த கொலைச் சம்பவம் நடந்துள்ளது

    மகாரஷ்டிராவின் மும்பையில் புறநகர் ரெயிலில் கல்லூரி பேராசிரியர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    உயிரிழந்தவர் தனியார் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வந்த அலோக் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

    நேற்று மாலந்த் ரெயில் நிலையத்தில் ரெயில் நிற்கும்போது ரெயிலில் அவருடன் பயணித்த சக பயணி ஒருவர் அவரது வயிற்றில் பலமுறை குத்திவிட்டு அங்கிருந்து தப்ப்பியோடியுள்ளார்.

    முதற்கட்ட விசாரணையில், ரெயிலில் இருவருக்கும் இடையே சிறிய விஷயத்திற்காக ஏற்பட்ட திடீர் வாக்குவாதம்  காரணமாக இந்தத் தாக்குதல் நடந்ததாக என்று தெரிய வந்துள்ளது. 

    இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த ரயில்வே போலீசார், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து 12 மணி நேரத்திற்குள் குற்றவாளியைக் கைது செய்துள்ளனர்.

    ரெயிலில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள நேரத்திலேயே  இந்த கொலைச் சம்பவம் நடந்துள்ளது பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    • 1-ம் வகுப்பு முதல் பள்ளிகளில் இந்தியை கட்டாயமாக்கும் முடிவு (பின்னர் திரும்ப பெறப்பட்டது) இந்த சதியின் ஒரு பகுதி.
    • ஜெய் மராட்டியத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

    30 ஆண்டுகளாக மும்பை மாநகராட்சியில் ஆதிக்கம் செலுத்தி வந்த தாக்கரே குடும்பத்திடம் இருந்து பாஜக அந்த மாநகராட்சியை கைப்பற்றியுள்ளது.

    நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் உள்ள 227 வார்டுகளில் பாஜக-89, சிவசேனா(ஏக்நாத் ஷிண்டே)-29 இடங்களில் வெற்றி பெற்றன. உத்தவ் தாக்கரே சிவசேனாவுக்கு 65 இடங்களும், அதன் கூட்டணியில் உள்ள ராஜ் தாக்கரே வுக்கு 3 இடங்களும் கிடைத்தன.

    இந்த நிலையில் சிவ சேனாவை பாஜகவால் அழிக்க முடியாது என்று உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

    பால் தாக்கரே நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடந்த நிகழ்ச்சியில் அவர் இது தொடர்பாக பேசியதாவது:-

    சிவசேனா (உத்தவ் தாக்கரே) கட்சி மட்டுமல்ல. அது ஒரு சித்தாந்தம் நிறைந்தது. அதை முடிவுக்கு கொண்டு வர முடியும் என்று பாஜக. நினைத்தால் அது தவறு. எங்களை பாஜகவால் அழிக்க முடியாது. சிவசேனா இல்லை என்றால் பாஜக ஒருபோதும் மும்பை மாநகராட்சிையயோ அல்லது மாநிலத்தையோ கைப்பற்றி இருக்க முடியாது.

    உள்ளாட்சி தேர்தலில் முதல் முறையாக பணபலம் பயன்படுத்தப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் குறைபாடு உள்பட பல்வேறு பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் சந்தித்தன. மும்பை மாநகராட்சி தேர்தல் முடிவுகள் நாங்கள் விரும்பியபடி இல்லாவிட்டாலும் வலுவான எதிர்க்கட்சியாக உள்ளோம்.

    சிவசேனா அதிகாரம் பெறுவதற்காக தொடங்கப் படவில்லை. மராட்டிய மக்களின் உரிமைக்காக போராடுவதற்காகவே தொடங்கப்பட்டது.

    மராட்டிய மாநிலத்தில் மராத்தி அல்லாத கலாச்சாரத்தை திணிக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. 1-ம் வகுப்பு முதல் பள்ளிகளில் இந்தியை கட்டாயமாக்கும் முடிவு (பின்னர் திரும்ப பெறப்பட்டது) இந்த சதியின் ஒரு பகுதி.

    சிவசேனா தொண்டர்களால் பொதுவாக பயன்படுத்தப்படும் ஜெய் மராட்டியம் என்ற முழக்கத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. அனைவரும் அதை ஒரு வாழ்த்தாக பயன்படுத்த வேண்டும். இவ்வாறு உத்தவ் தாக்கரே பேசினார். 

    • முடியைப் பிடித்து இழுத்து, முகத்தில் குத்தியும், நகங்களால் பிறாண்டியும் தாக்கியுள்ளார்.
    • 18 வயது மகனையும் அந்த ஊழியர் கீழே தள்ளிவிட்டுள்ளார்.

    மகாராஷ்டிராவின் மும்பை, வடாலா பகுதியைச் சேர்ந்த ஷெஹ்னாஸ் சையத் (46) என்ற பெண் மசாஜ் சேவையை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்துள்ளார்.

    கடந்த புதன்கிழமை மாலை வீட்டிற்கு மசாஜ் செய்ய வந்த பெண் ஊழியரின் நடத்தை மற்றும் அவர் கொண்டு வந்த மசாஜ் பெட் அறையில் வைப்பதற்கு வசதியாக இல்லாதது போன்ற காரணங்களால், ஷெஹ்னாஸ் அந்த முன்பதிவை ரத்து செய்துள்ளார்.

    முன்பதிவை ரத்து செய்ததால் ஆத்திரமடைந்த அந்த பெண் ஊழியர், ஷெஹ்னாஸுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

    பின்னர் ஆத்திரம் தலைக்கேறி, ஷெஹ்னாஸின் முடியைப் பிடித்து இழுத்து, முகத்தில் குத்தியும், நகங்களால் பிறாண்டியும் தாக்கியுள்ளார். இருவரும் கட்டிப்புரண்டு சண்டை போட்டுள்ளனர். 

    தடுக்க வந்த ஷெஹ்னாஸின் 18 வயது மகனையும் அந்த ஊழியர் கீழே தள்ளிவிட்டுள்ளார். 

    இது தொடர்பாக ஷெஹ்னாஸ் போலீசில் புகார் அளித்தார். போலீசார் அந்த ஊழியர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    தொடர்புடைய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, அந்த ஊழியரை நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது.    

    • குடும்ப வறுமை காரணமாக, அவரது தாய் நீண்ட காலமாகத் தெருவோர நடைபாதையில் அமர்ந்து காய்கறி விற்று வந்துள்ளார்.
    • இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோ 12 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்து வைரலாகி வருகிறது.

    கஷ்டப்பட்டு வளர்த்த மகன் ஒரு நிலைக்கு வரும்போது எந்தத் தாய்க்கும் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.

    மகாராஷ்டிராவின் சிந்துதுர்க் மாவட்டத்தைச் சேர்ந்த கோபால் சாவந்த் என்ற இளைஞர், அத்தகைய ஒரு நெகிழ்ச்சியான தருணத்தை வீடியோவாக பகிர்ந்துள்ளார்.

    கோபால் சாவந்த் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (CRPF) பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    குடும்ப வறுமை காரணமாக, அவரது தாய் நீண்ட காலமாகத் தெருவோர நடைபாதையில் அமர்ந்து காய்கறி விற்று வந்துள்ளார்.

    தனக்கு வேலை கிடைத்த செய்தியைத் தாயிடம் சொல்ல கோபால் அவர் கடை வைத்திருக்கும் இடத்திற்கே நேரடியாகச் சென்றார்.

    தாய் காய்கறி விற்றுக் கொண்டிருந்த இடத்திற்குச் சென்ற கோபால், தனக்கு CRPF வேலை கிடைத்த விவரத்தைக் கூறினார். இதைக் கேட்டதும் அந்தத் தாய் தனது மகனை ஆரத்தழுவி ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.

    இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோ 12 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்து வைரலாகி வருகிறது.

    வறுமை சாதிப்பதற்கு ஒரு தடையல்ல என்பது கோபால் மூலம் மீண்டும் நிரூபணமாகி உள்ளது.  

    • மும்பை மாநகராட்சிக்கு 9 வருடங்களுக்குப் பிறகு தேர்தல் நடத்தப்பட்டுள்ளது.
    • 227 கவுன்சிலர் இடங்களுக்கு 1700 பேர் போட்டி.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை மற்றும் மேலும் 28 மாநராட்சிகளுக்கு தேர்தல் இன்று நடைபெற்றது. இன்று காலை தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5.30 மணி வரை நடைபெற்றது. இதில் 46 முதல் 50 சதவீதம் வாக்குகள் பதிவானதாக மாநில தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். பின்னர் சரியான வாக்குப்பதிவு விவரங்கள் வெளியிடப்படும் என்றார்.

    கடந்த 2017-ம் ஆண்டு மும்பை மாநகராட்சிக்கு தேர்தல நடைபெற்றது. அப்போது 55.53 சதவீத வாக்குகள் பதிவாகின. முதல்முறையாக தேர்தலை சந்தித்த ஜால்னா மற்றும் இசால்கராஞ்சி மாநகராட்சிகளில் 56.35 சதவீத வாக்குகள் பதிவாகின.

    வாக்காளர்கள் கையில் வைக்கப்பட்ட மை எளிதாக அழிந்துவிடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து விசாரணை நடத்தப்படும் என தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளா்ர.

    மும்பை மாநகராட்சி தேர்தலில் மகாயுதி கூட்டணிக்கும், தாக்கரே சகோதரர்களுக்கும் இடையில் போட்டி நிலவுகிறது. 227 கவுன்சிலர் இடங்களை கொண்ட மும்பை மாநகராட்சி தேர்தலில் 1700 பேர் போட்டியிட்டனர்.

    மும்பை மாநகராட்சிக்கு 9 வருடங்களுக்குப் பிறகு தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. 4 வருடத்திற்கு முன்னதாக நடத்தப்பட வேண்டிய தேர்தல், தற்போது நடத்தப்பட்டுள்ளது.

    ×