

மகாராஷ்டிராவில் பள்ளி சென்று வீடு திரும்பிக்கொண்டிருந்த 13 வயதான 6 ஆம் வகுப்பு சிறுமி மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.
மகாராஷ்டிராவின் அகில்யநகர் மாவட்டத்தில் உள்ள வட்காவ்ன் பான் கிராமத்தில் நேற்று மதியம், அந்தச் சிறுமி பள்ளியிலிருந்து வீட்டிற்கு சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
அவ்வழியே வந்த ஒரு இரு சக்கர வாகன ஓட்டுநர் சிறுமியை நிறுத்தி, வழி கேட்பது போல் பாசாங்கு செய்தார்.
சிறுமி சைக்கிளை நிறுத்திய உடனேயே, அவர் ஆசிட் திரவத்தை அவள் முகத்தில் வீசினார்.
இதில் முகம் கடுமையாக தீக்காயமடைந்தது, சிறுமி வலியால் அலறினாள். அந்த நபர் அந்த இடத்திலிருந்து தப்பிச் சென்றார்.
தாக்குதலுக்குப் பிறகு, அந்தச் சிறுமி தைரியத்தை வரவழைத்துக்கொண்டு தனது பள்ளிக்குத் திரும்பி ஓடினாள்.
அங்கு ஆசிரியர்கள் நிலைமையை உடனடியாகப் புரிந்துகொண்டு, சிறுமிக்கு முதலுதவி அளித்து, மருத்துவமனையில் சேர்த்தனர்.
அந்தச் சிறுமி தற்போது லோனியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார், அவரது உடல்நிலை சீராக உள்ளது.
இந்தச் சம்பவத்தால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் லோனி-சங்கம்னேர் சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். குற்றம் சாட்டப்பட்டவரை உடனடியாகக் கைது செய்து கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் குற்றவாளியை அடையாளம் காண்பதற்காக, கிராமத்தைச் சுற்றி பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராககளை ஆய்வு செய்து வருகின்றனர்.