திருப்பதியில் வி.ஐ.பி. பிரேக் தரிசன நேரம் மாற்றியமைக்கப்படுகிறது

திருப்பதியில் தொலைபேசி மூலம் பக்தர்களிடம் குறை கேட்கும் நிகழ்ச்சி நடந்தது. கடந்த மாதம் திருப்பதியில் 1 கோடி லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
திருப்பதியில் வி.ஐ.பி. பிரேக் தரிசன நேரம் மாற்றியமைக்கப்படுகிறது
Published on

திருப்பதியில் தொலைபேசி மூலம் பக்தர்களிடம் குறை கேட்கும் நிகழ்ச்சி நடந்தது. அதை தொடர்ந்து தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:-

திருப்பதிக்கு கடந்த மாதம் 21 லட்சத்து 12 ஆயிரம் பக்தர்கள் வருகை தந்து ஏழுமலையானை தரிசனம் செய்தனர். அவர்கள் கோவில் உண்டியலில் 122 கோடியே 19 லட்சம் ரூபாயை காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

சுமார் ஒரு கோடி லட்டுகள், அதாவது 98 லட்சத்து 44 ஆயிரம் லட்டுகள் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. 44 லட்சத்து 70 ஆயிரம் பக்தர்கள் ஏழுமலையானுக்கு முடி காணிக்கை செலுத்தினர்.

இலவச தரிசனத்துக்காக வரும் பக்தர்களின் வசதிக்காக திருப்பதியில் இலவச தரிசன டோக்கன் வழங்கும் மையங்கள் விரைவில் செயல்பட உள்ளன. திருப்பதி மலையில் செயல்படும் அறைகள் ஒதுக்கீடு செய்யும் கவுன்டர்கள் சோதனை அடிப்படையில் விரைவில் திருப்பதிக்கு மாற்றம் செய்யப்பட உள்ளது.

இதன் மூலம் அறைகள் கிடைக்காத பக்தர்கள் திருப்பதியில் தங்கி கொள்ளலாம்.

இலவச தரிசனத்துக்காக வரும் பக்தர்களுக்கு நள்ளிரவுக்கு மேல் சாமி தரிசனத்திற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் அவர்கள் வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்திலேயே இரவு முழுவதும் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

அவ்வாறு காத்திருக்கும் பக்தர்கள் காலையில் விரைவாக ஏழுமலையானை தரிசனம் செய்ய வசதியாக, வி.ஐ.பி. பிரேக் தரிசன நேரத்தை மாற்றி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இனி, காலை 10 மணிக்கு பின்னரே வி.ஐ.பி. தரிசனம் என்ற நடைமுறை அமலுக்கு கொண்டுவரப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com