என் மலர்tooltip icon

    உலகம்

    அமெரிக்கா - ஈரான் இடையேயான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை ரத்து
    X

    அமெரிக்கா - ஈரான் இடையேயான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை ரத்து

    • இன்று ஈரான் தாக்குதலில் 8 பேர் பலியானதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
    • இஸ்ரேலும், ஈரானும் பரஸ்பர தாக்குதலில் ஈடுபட்டு வருவதால் போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இஸ்ரேல்-ஈரான் இடையேயான கடும் மோதலால் மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்றம் நீடித்து வருகிறது. அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது இஸ்ரேல் நேற்று முன்தினம் அதிகாலை கடும் தாக்குதல் நடத்தியது.

    இஸ்ரேலின் 200 போர் விமானங்கள், ஈரானில் உள்ள அணுசக்தி தளங்கள், ராணுவ தளங்கள் மீது குண்டுகளை வீசின. அதேபோல் மாலையிலும் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல்களில் 9 அணு விஞ்ஞானிகள், 3 ராணுவ தளபதிகள் உட்பட 78 பேர் உயிரிழந்தனர். இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் நேற்று முன்தினம் இரவு ஏவுகணைகளை வீசி கடும் தாக்குதல் நடத்தியது.

    இதில் இஸ்ரேலின் ராணுவ மையங்கள், விமானப்படை தளங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தப் பட்டது. டெல் அவிவ், ஜெருசலேம் உள்ளிட்ட பல நகரங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்தன. இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பை மீறி ஈரானின் ஏவுகணைகள் இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்கின. நேற்றும் இரு நாடுகளும் பரஸ்பர தாக்குதல்களில் ஈடுபட்டன.

    இதற்கிடையே தங்களது தாக்குதல்கள் தொடரும் என்று இஸ்ரேலும், ஈரானும் அறிவித்தன.

    இந்த நிலையில் 3-வது நாளாக இன்று இஸ்ரேல், ஈரான் இடையே தாக்குதல்கள் தொடர்ந்து வருகிறது. நள்ளிரவு முதல் அதிகாலை வரை இரு தரப்பும் மாறி மாறி ஏவுகணைகளை வீசி தாக்குதல்களை தொடுத்தன.

    இஸ்ரேலில் இன்று அதிகாலை நடத்திய தனது புதிய தாக்குதலில் ஈரானின் ராணுவ தலைமையகம், அணுசக்தி நிலையங்கள், எண்ணெய் நிலையங்கள், எரிசக்தி கட்டமைப்புகள், எரிவாயு நிலையங்கள் குறிவைக்கப்பட்டன. ஈரான் தலைநகர் தெக்ரானில் உள்ள பாதுகாப்பு அமைச்சக தலைமையகம் மீது ஏவுகணை வீசப்பட்டது. அதேபோல் தெக்ரானின் வடமேற்கில் உள்ள ஷாஹ்ரான் எண்ணை கிடங்கு மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

    அதேபோல் தெக்ரானுக்கு அருகில் உள்ள ஒரு எண்ணை சுத்திகரிப்பு நிலையத்தையும் இஸ்ரேல் ராணுவம் தாக்கியது. அங்கு பற்றி எரியும் தீயை அணைக்கும் முயற்சி நடந்து வருகிறது.

    புஷேர் மற்றும் அபாடனில் உள்ள முக்கிய எரிசக்தி தளங்கள் மீது இஸ்ரேல் குண்டுகளை வீசியது. இஸ்ரேல் தாக்குதலால் உலகின் மிகப்பெரிய எரிவாயு உற்பத்தி நிலையமான தெற்கு பார்ஸ் எரிவாயு மையம் தீப்பிடித்து எரிக்கிறது.

    அதேபோல் ஹைபா, தம்ரா உள்ளிட்ட ஈரானின் பல்வேறு நகரங்களில் குடியிருப்பு பகுதிகள் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இஸ்ரேலின் தாக்குதல்களால் தெக்ரான் உள்பட நகரங்களில் குண்டுவெடிப்பு சத்தங்கள் கேட்டுக் கொண்டே இருந்தன. இதுதொடர்பாக இஸ்ரேல் ராணுவம் கூறும் போது, ஈரானின் அணு ஆயுதத் திட்டத்துடன் தொடர்புடைய தெகிரானில் உள்ள இலக்குகள் மீது விரிவான தொடர் தாக்குதல்கள் நடத்தி முடிக்கப்பட்டது.

    இந்த இலக்குகளில் அணுசக்தி திட்டத்தின் தலைமையகமான ஈரானிய பாதுகாப்பு அமைச்சக தலைமையகமும் அடங்கும் என்று தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தெக்ரானில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தின் மீது இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் 29 குழந்தைகள் உட்பட 60 பேர் பலியானதாக ஈரான் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இஸ்ரேலின் புதிய தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் கடும் தாக்குதல்களை தொடுத்தது. இஸ்ரேல் நகரங்கள் மீது சரமாரியாக ஏவுகணைகள், டிரோன்கள் வீசப்பட்டன. இஸ்ரேலின் எரிசக்தி உள்கட்டமைப்பு மற்றும் போர் விமான எரிபொருள் உற்பத்தி நிலையங்களை குறிவைத்து தாக்கின. டெல்அவிவ், ஜெருசலேம், பேட் யாம், ரெஹோவோட் உள்ளிட்ட நகரங்களில் குடியிருப்பு பகுதிகள் தாக்குதலுக்கு இலக்காகின. ஏவுகணை தாக்குதலில் டெல் அவிவ்வில் பல கட்டிடங்கள் சேதமடைந்தன. டான் மாவட்டத்தில் உள்ள ஒரு 5 மாடி கட்டிடம் இடிந்தது. மேலும் அருகில் உள்ள மற்றொரு குடியிருப்பு கட்டிடமும் சேதமடைந்தது.

    இடிந்து விழுந்த கட்டிடங்களில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. ஈரான் தாக்குதலால் இஸ்ரேல் முழுவதும் வான்வழித் தாக்குதலுக்கான அபாய ஒலி எழுப்பப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர். ஆனாலும் ஈரான் தாக்குதலில் 8 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலும், ஈரானும் தொடர்ந்து 3-வது நாளாக பரஸ்பர தாக்குதலில் ஈடுபட்டு வருவதால் போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் அமெரிக்கா-ஈரான் இடையேயான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான 6-ம் கட்ட பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தை இன்று ஓமனில் நடைபெற இருந்த நிலையில் அதில் பங்கேற்க ஈரான் மறுத்துவிட்டது.

    இஸ்ரேல் மீது ஏவப்பட்ட ஏவுகணைகளை தடுத்து நிறுத்த இஸ்ரேலுக்கு அமெரிக்கா உதவியது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×