பாம்பனில் புதிய ரெயில் பாலம் பணிகள் விரைவில் தொடங்குகிறது

ராமேசுவரம் அருகே உள்ள பாம்பனில் ரூ.250 கோடியில் புதிய ரெயில் பாலம் பணிகள் விரைவில் தொடங்குகிறது. இந்த பணிகள் 2 ஆண்டுகளில் நிறைவடையும்.
பாம்பன் கடலில் கட்டப்பட உள்ள புதிய ரெயில் பாலத்தின் மாதிரி தோற்றம்.
பாம்பன் கடலில் கட்டப்பட உள்ள புதிய ரெயில் பாலத்தின் மாதிரி தோற்றம்.
Published on

ராமேசுவரம்:

ராமேசுவரம் அருகே உள்ள பாம்பனில் கடல் மீது 2 கி.மீ. நீளத்துக்கு கடந்த 1914-ம் ஆண்டு ரெயில் பாலம் கட்டப்பட்டது. கடந்த 105 வருடங்களாக அதில் போக்குவரத்து நடந்து வருகிறது. இந்த பாலத்தில் உள்ள தூக்குப்பாலம் கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வலுவிழுந்ததால் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. 83 நாட்களாக ரெயில்கள் இந்த பாலத்தில் செல்லவில்லை. இதனால் ராமேசுவரத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் பெரிதும் பாதிக்கப்படடனர். இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட வந்த பிரதமர் நரேந்திரமோடி பாம்பனில் புதிய ரெயில் பாலம் கட்டப்படும் என அறிவித்தார்.

அறிவிப்பை தொடர்ந்து ரெயில்வே அமைச்சகத்தின் மூலம் பாம்பன் கடலில் மண் ஆய்வு நடைபெற்றது. கன்னியாகுமரியில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புதிய பாம்பன் பாலம்  அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார். ரெயில்வே துறையோடு இணைந்த விகாஸ் நிகாம் நிறுவனத்தின் முதன்மை நிதி  இயக்குநர் சவுத்ரி, திட்ட ஒருங்கிணைப்பாளர்  ரெட்டி தலைமையிலான அதிகாரிகள் பாம்பனில் ரெயில் பாலம் கட்டும் இடத்தை ஆய்வு செய்தனர்.

பின்னர் அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:-

பாம்பன் கடலில் உள்ள ரெயில் பாலம் அருகே ரூ.250 கோடியில் புதிய பாலம் அமைக்க டெண்டர் விடப்பட்டு தனியார் கட்டுமான  நிறுவனத்திடம் பணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. கட்டுமான பணிகள் 2 ஆண்டுகளில் நிறைவடையும். புதிய பாலம் 141 தூண்களையும், 140 கர்டர்களையும் கொண்டிருக்கும். நடுவில் உள்ள தூக்குப்பாலம் 20 மீட்டர் உயரத்தில் அமைக்கப்படும். தூக்குப்பாலத்தின் இரு புறமும் நமது நாட்டின் தேசிய கொடியை பிரதிபலிப்பதுபோல் கட்டப்படும். இரவில் தேசிய கொடியின் பிரதிப்பலிப்பு பிரகாசமாக இருக்கும்.

கப்பல்கள் வரும்போது தூக்குப்பாலம் 22 மீட்டர் உயரம் வரை திறக்கப்படும். புதிய ரெயில் பாலம் முழுமையாக உள்நாட்டு தொழில் நுட்பத்தில் மட்டுமே கட்டப்பட உள்ளது. கண்காணிப்பு கேமரா, சென்சார், தகவல் தொடர்பு சாதனம் உள்ளிட்ட பல வசதிகள்  தூக்குப்பாலத்தில் இடம்பெறுகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com