

சென்னை:
அம்பேத்கர் 125-வது பிறந்த நாள் நிறைவு விழா மற்றும் விடுதலை சிறுத்தைகளின் விருது வழங்கும் விழா சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நாளை (4-ந்தேதி) நடைபெறுகிறது.
விழாவிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்குகிறார்.
விழாவில் அம்பேத்கர் சுடர் விருது புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கும், பெரியார் ஒளி விருது ஓவியாவிற்கும், அயோத்திதாசன் ஆதவன் விருது கவிஞர் கவி.பூங்குன்றனுக்கும் வழங்கப்படுகிறது.
காமராஜர் கதிர் விருது ஹென்றி திவாகராசனுக்கும், காயிதே மில்லத் விருது தர்வேஸ்க்கும், செம்மொழி ஞாயிறு விருது இளங்குமரனாருக்கும் வழங்கி கவுரவிக்கப்படுகிறது.
விருது மற்றும் பொற்கிழியை தொல். திருமாவளவன் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.
விழாவில் பொதுச்செயலாளர் சிந்தனை செல்வன், ரவிக்குமார், பொருளாளர் முகம்மது யூசூப், நிர்வாகிகள் பாவரசு, உஞ்சை அரசன், எஸ்.எஸ். பாலாஜி, பசுமை வளவன், இரா. செல்வம், செல்லத்துரை, வி.கோ. ஆதவன், அன்பு செல்வன், அம்பேத் வளவன், வக்கீல்கள் வீர.ராஜேந்திரன், தாமரை உள்ளிட்ட பலர் கலந்து கொள்கிறார்கள்.