ராமர் கோவிலை ஆதரித்த ஜெயலலிதா ஒரு 'இந்துத்துவா' தலைவர் : தமிழிசை சவுந்தரராஜன்

ஜெயலலிதா இந்துத்துவா தலைவர் என்பதை யாரும் மறுக்க முடியாது. கரசேவையை காரணம்காட்டி பாஜக ஆட்சி கலைக்கப்பட்ட போது அதனை துணிச்சலாக கண்டித்தவர் ஜெயலலிதா.
ராமர் கோவிலை ஆதரித்த ஜெயலலிதா ஒரு 'இந்துத்துவா' தலைவர் : தமிழிசை சவுந்தரராஜன்
Published on

பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது, "ஜெயலலிதா இந்து மதம் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட இந்துத்துவா தலைவர். அவர் இந்துத்துவா தலைவர் என்பதை யாரும் மறுக்க முடியாது. கரசேவர்களுக்கு பாராட்டு தெரிவித்ததாக இருக்கட்டும். கரசேவையை காரணம்காட்டி பாஜக ஆட்சி கலைக்கப்பட்ட போது அது தவறு என துணிச்சலாக கண்டித்தவர் அவர்.

ராமர் கோவில் தேவை என தனது தொண்டர்களிடம் கையெழுத்து வாங்கி அனுப்பியவர் அவர். கோவில்களில் அன்னதானம் போட்டவர். ராமசேது பாலத்தை திராவிட காட்சிகள் எதிர்த்த போது அதற்கு ஆதரவு தெரிவித்தவர் அவர்,

ஜெயலலிதா இன்று உயிருடன் இருந்திருந்தால் ராமர் கோவிலுக்கு சென்று வழிபாட்டு ராமர் கோவில் குறித்த கனவு நிறைவேறியிருக்கிறது என்று பேசியிருப்பார். பல ஆன்மிக நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர், நல்ல நேரம் பார்த்து தான் வேட்புமனு தாக்கல் செய்வார்.

ஜெயலலிதாவை பெரிய வட்டத்திற்கு எடுத்து செல்ல நாங்கள் விரும்புகிறோம். அவரை அதிமுகவினர்தான் குறுகிய வட்டத்தில் சுருக்க நினைக்கின்றனர். கர சேவகர்களை ஜெயலலிதா ஆதரித்தபோது இப்போதுள்ள அதிமுக தலைவர்கள் எதிர்க்காதது ஏன்? என்று அவர் பேசியுள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு ஜெயலலிதா ஒரு இந்துத்துவா தலைவர் என்று பாஜக தலைவர் அண்ணாமலை பேசியிருந்தது சர்ச்சையான நிலையில், இன்று மீண்டும் அதே கருத்தை தமிழிசை சவுந்தராஜனும் பேசியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com