search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அ.தி.மு.க.-தே.மு.தி.க இடையே நாளை உடன்பாடு
    X

    அ.தி.மு.க.-தே.மு.தி.க இடையே நாளை உடன்பாடு

    • அ.தி.மு.க. விருப்ப மனு நேர்காணலை நிறைவு செய்து விட்டு பா.ம.க., தே.மு.தி.க. கூட்டணியை இறுதி செய்வதில் தீவிரமாக உள்ளது.
    • அ.தி.மு.க. கூட்டணிக்கு பா.ம.க. வராத நிலையில் தே.மு.தி.க.விற்கு கேட்ட தொகுதிகளில் சிலவற்றை கொடுக்கவும் அ.தி.மு.க. தயாராகி விட்டது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் தேதி ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படுகின்ற நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீட்டை இறுதி செய்து வருகின்றன. தி.மு.க. தனது கூட்டணி கட்சிக்கு தொகுதிகளை பங்கீடு செய்துவிட்டு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

    ஆனால் அ.தி.மு.க. இன்னும் கூட்டணியை இறுதி செய்யாமல் இருந்து வருகிறது. தே.மு.தி.க.வுடன் 2-வது கட்ட பேச்சுவார்த்தை நடந்து முடிந்து உள்ளது. ஆனாலும் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வந்தது.

    பா.ம.க.வை தனது பக்கம் இழுக்க அ.தி.மு.க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. கூட்டணியை வலுப்படுத்தும் நோக்கத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில் பா.ம.க.வுடன் ரகசியமாக பேசி வருகின்றனர்.

    அதே வேளையில் பா.ஜ.க.வும் பா.ம.க.வை தங்கள் பக்கம் இழுக்க ஒருபுறம் பேச்சு நடத்தி வருகிறது.

    இந்த நிலையல் அ.தி.மு.க. விருப்ப மனு நேர்காணலை நிறைவு செய்து விட்டு பா.ம.க., தே.மு.தி.க. கூட்டணியை இறுதி செய்வதில் தீவிரமாக உள்ளது. ஒருவேளை பா.ம.க.-பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்கும் நிலை ஏற்பட்டால் தே.மு.தி.க.வை அழைத்து பேசி தொகுதி உடன்பாட்டை இறுதி செய்ய அ.தி.மு.க. தயாராகி விட்டது.


    பா.ம.க.வுடன் கடைசி கட்ட பேச்சுவார்த்தை இன்று நடத்தி விட்டு தொகுதி பங்கீட்டை முடிக்க அ.தி.மு.க. திட்டமிட்டுள்ளது. பா.ம.க.வுடன் பா.ஜனதா இன்று பேச்சுவார்த்தை நடத்தினாலும் கூட அ.தி.மு.க.வும் தொடர்ந்து அக்கட்சியை இழுக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது.

    இதற்கிடையில் தே.மு.தி.க.வுடன் இறுதி கட்ட பேச்சுவார்த்தையை நாளை (வியாழக்கிழமை) நடத்த அ.தி.மு.க. முடிவு செய்துள்ளது. கடந்த சில நாட்களாக பா.ம.க.வுடன் ரகசிய பேச்சு நடத்திய அ.தி.மு.க. அதில் முடிவு எட்டாததால் தே.மு.தி.க.வை அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு அழைப்பதில் தாமதம் ஏற்பட்டது.

    ஆனால் நாளை மாலை அ.தி.மு.க.வுடன் தே.மு.தி.க. தொகுதி பங்கீட்டு குழுவினர் சந்திக்க உள்ளனர். அப்போது தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு உடன்பாடு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தே.மு.தி.க. தரப்பில் 7 தொகுதிகளும், ஒரு மேல் சபை எம்.பி.யும் வலியுறுத்தப்பட்டு வந்தது. ஆனால் அ.தி.மு.க. 4 தொகுதிகளை மட்டும் ஒதுக்க முன் வருவதாக தெரிவித்தது. மேல்சபை எம்.பி. கொடுக்க இயலாது என்று தெரிவித்த நிலையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடக்கிறது.

    அ.தி.மு.க. கூட்டணிக்கு பா.ம.க. வராத நிலையில் தே.மு.தி.க.விற்கு கேட்ட தொகுதிகளில் சிலவற்றை கொடுக்கவும் அ.தி.மு.க. தயாராகி விட்டது. அ.தி.மு.க.-தே.மு.தி.க. தொகுதி பங்கீடு நாளை சுமூகமாக நடைபெற்று இறுதியாகக் கூடிய சூழல் நிலவுவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    Next Story
    ×