ஆன்மிகத்தையும் அரசியலையும் பிரித்து பார்க்க கூடாது- அண்ணாமலை

தமிழகத்தில் தண்ணீர் பிரச்சனை வந்துவிடக்கூடாது என பிரதமர் நினைக்கிறார். மத்திய அரசால் வழங்கப்படுகின்ற நிதி வீணடிக்கப்படுகிறது.
ஆன்மிகத்தையும் அரசியலையும் பிரித்து பார்க்க கூடாது- அண்ணாமலை
Published on

கோவை:

தமிழக பா.ஜனதா தலைவரும், கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை இன்று பேரூர் ஆதீனம் மருதாச்சல அடிகளாரை சந்தித்து ஆசீர்வாதம் வாங்கினார். மேலும் அங்குள்ள கோவிலில் வழிபாடும் நடத்தினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கோவையில் கடந்த 3 நாட்களுக்கு மேலாக தண்ணீர் பஞ்சம் தலை விரித்து ஆடுகிறது. இதனால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு மக்கள் அவதியடைந்து வருகிறார்கள்.

எனவே இந்த விஷயத்தில் அரசு மெத்தனபோக்கு காட்டாமல் விரைந்து செயல்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் அரசியலை தாண்டி சிறுவாணி தண்ணீரை பெறுவதற்கு, கேரள அரசுடன் பேசி, தண்ணீரை கொண்டு வர தி.மு.க. அரசு முயற்சிக்க வேண்டும்.

குளங்களுக்கு நீர் வரும் பாதையை தூர்வாருவதற்கு மத்திய அரசு பலகோடி நிதிகளை ஒதுக்கினாலும், தமிழக அரசு அதனை சரியான முறையில் கையாளுவது இல்லை.

தமிழகத்தில் தண்ணீர் பிரச்சனை வந்துவிடக்கூடாது என பிரதமர் நினைக்கிறார். இதற்காக தான் நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால் அந்த நிதியை ஆளும் அரசு சரியாக பயன்படுத்துவதில்லை.

அதே போல பொதுமக்களின் வீடுகளுக்கே நேரடியாக குடி தண்ணீர் கிடைக்கும் வகையில் ஜல்சக்தி திட்டம் உருவாக்கப்பட்டது.

ஆனால் தமிழகத்தில் அத்திட்டம் முழுமையாக முடக்கப்பட்டுள்ளதுடன், அதில் முறைகேடும் நடைபெற்று வருகிறது. இதனால் மத்திய அரசால் வழங்கப்படுகின்ற நிதி வீணடிக்கப்படுகிறது.

எப்பவுமே அரசியல் என்பது அறம் சார்ந்து இருக்க வேண்டும். ஆன்மிகத்தையும், அரசியலையும் பிரித்து பார்க்க கூடாது. எப்பொழுது எல்லாம் அரசியலில் அரசியல்வாதிகள் தவறு செய்கிறார்களோ, அந்த சமயத்தில் அவர்கள், ஆதீனங்கள், குருமார்களை சந்தித்து அறிவுரைகளை பெற்று, அதனை செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com