ஆளாளுக்கு அரசியலில் ஈடுபடுவதா?: உறவினர்கள் மீது சசிகலா அதிருப்தி

தனது உறவினர்கள் அரசியல் கருத்துக்களை கூறி அரசியலில் ஈடுபடுவது சசிகலாவுக்கு வேதனையை ஏற்படுத்தி உள்ளதாக அவரது வக்கீல் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. #sasikala #dinakaran #relations
ஆளாளுக்கு அரசியலில் ஈடுபடுவதா?: உறவினர்கள் மீது சசிகலா அதிருப்தி
Published on

பெங்களூரு:

சசிகலாவின் உறவினரான தினகரன் சென்னை ஆர்.கே. நகர் தொகுதி எம்.எல்.ஏ. வாக உள்ளார். அவருக்கு ஆதரவாக உள்ள 18 எம்.எல். ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இந்த தகுதி நீக்க வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

அடுத்த வாரம் சென்னை ஐகோர்ட்டில் தீர்ப்பு வெளியாக உள்ளது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களில் இருந்து ஒருவரை முதல்- அமைச்சராக தேர்வு செய்ய வேண்டும் என்று தினகரன், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நிபந்தனை வைத்துள்ளார். இந்த நிபந்தனையை ஏற்றால் அ.தி.மு.க.வுடன் இணைய தானும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேரும் தயார் என்று அறிவித்துள்ளார்.

தினகரன் அடிக்கடி பெங்களூரு சென்று சசிகலாவை சந்தித்து ஆலோசனை பெற்று வருகிறார். அவருடைய ஆலோசனையின்படியே அரசியலில் ஈடுபட்டு வருவதாக அவர் கூறி வருகிறார்.

இந்த நிலையில் இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியா தானும் அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளார். ஏற்கனவே அவர் தொண்டு நிறவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

இதேபோல் தினகரனின் தம்பி பாஸ்கரனும் அரசியலில் ஈடுபட்டு வருகிற தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் அறிவித்துள்ளார்.

சசிகலாவின் தம்பி திவாகரன் நேரடியாக அரசியலில் ஈடுபடவில்லை என்றாலும் அவ்வப்போது அரசியல் கருத்துக்களை கூறி வருகிறார். திவாகரனின் மகன் ஜெய்ஆனந்த் அரசியல் சார்பற்ற அமைப்பு ஒன்றை உருவாக்கி இருக்கிறார்.அவரும் சில நேரங்களில் அரசியல் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்.

சசிகலாவில் கணவர் நடராஜன் அரசியலில் நேரடியாக தலையிடவிலலை என்றாலும் அவரும் அரசியல் கருத்துக்களை பேட்டி வாயிலாக வெளிப்படுத்தி வருகிறார். முதல்- அமைச்சராக ஜெயலலிதா இருந்தபோது தான் எழுதிக் கொடுத்ததை அவர் படித்ததாகவும் தான் சொன்னபடி அவர் நடந்து கொண்டதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

அவருக்கு அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.

இப்படி தனது உறவினர்கள் அரசியல் கருத்துக்களை கூறி அரசியலில் ஈடுபடுவது சசிகலாவுக்கு வேதனையை ஏற்படுத்தி உள்ளது. பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள அவர் தன்னை பார்க்க வரும் வக்கீல்களிடம் இதுகுறித்து கூறி அனைவரையும் அமைதியாக இருக்கும்படி கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஏற்கனவே தான் நேரடி அரசியலில் ஈடுபட்டதால் தனக்கு பாதிப்பு ஏற்பட்டதை உறவினர்கள் எண்ணிப்பார்க்கவேண்டும் என்றும் அவர் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. #tamilnews #sasikala #dinakaran #relations

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com