

புதுடெல்லி:
இந்திய ராணுவத்தினரின் சார்பில் பள்ளி மாணவிகள் நாடு முழுவதும் சுற்றி பார்க்கும் வகையில் சத்பாவனா யாத்திரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, ஜம்மு காஷ்மீரில் படித்து வரும் பள்ளி மாணவிகள் சிலர் சத்பாவனா யாத்திரையாக டெல்லியை வந்தடைந்தனர். அவர்கள் இன்று பிரதமர் மோடியை சந்தித்து கலந்துரையாடினர்.
அப்போது அந்த மாணவிகளிடம் சுத்தமான இந்தியா திட்டம் குறித்தும், யோகாசனத்தின் பலன்கள் குறித்தும் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அதன்பின் அவர்கள், பிரதமர் மோடியுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி டுவிட்டரில் கூறுகையில், ஜம்மு காஷ்மீர் பள்ளி மாணவிகளுடன் அவர்களது பாடங்கள் மற்றும் சுத்தமான இந்தியா திட்டம், யோகாசனத்தின் பலன்கள் குறித்து கலந்துரையாடினேன் என பதிவிட்டுள்ளார்.