

நகரி:
திருப்பதி ஏழுமலையான் கோவில் முதன்மை அதிகாரியாக அனிஸ்குமார் சிங்கால் நியமனம் செய்யப்பட்டார். ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர் வட இந்தியாவை சேர்ந்தவர்.
அவர் நடைபாதையாக வந்து பதவி ஏற்றுக் கொண்டார். இதுவரை திருப்பதி கோவிலுக்கு தென் இந்தியாவை சேர்ந்தவர்களே முதன்மை அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டு இருந்தனர். முதல் முறையாக வடமாநிலத்தை சேர்ந்த ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதற்கு சாரதா பீடாதிபதி சொரூபானந்தா சுவாமிகள் எதிர்ப்பு தெரிவித்தார். ஆகம விதிகளை நன்கு அறிந்தவர்களைதான் முக்கிய பொறுப்புகளில் நியமனம் செய்ய வேண்டும் என்று கருத்து தெரிவித்தார்.
இதுபோல பல்வேறு அரசியல் தலைவர்களும் வடஇந்தியர் முதன்மை அதிகாரியாக நியமிக்கப்பட்டதற்கு அதிருப்தி தெரிவித்தனர்.
நடிகரும், ஜனசேனா கட்சி தலைவருமான பவன்கல்யாண் கூறுகையில், மதுரா, காசி, அமர்நாத் போன்ற கோவில்களில் தென் இந்தியர்கள் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டதில்லை. அப்படி இருக்கையில் திருப்பதி கோவிலுக்கு ஏன் வடஇந்தியரை முதன்மை அதிகாரியாக நியமனம் செய்துள்ளீர்கள்? இதற்கு ஆந்திர அரசு பதில் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.