காங்கிரஸ், என்சிபி அறிவிக்கும் முதல் மந்திரி வேட்பாளருக்கு ஆதரவு: உத்தவ் தாக்கரே

எதிர்க்கட்சிகளான மகா விகாஸ் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.இந்த தேர்தல் என்பது மகாராஷ்டிராவின் சுயமரியாதையை காப்பதற்கான போராட்டம் என்றார்.
காங்கிரஸ், என்சிபி அறிவிக்கும் முதல் மந்திரி வேட்பாளருக்கு ஆதரவு: உத்தவ் தாக்கரே
Published on

மும்பை:

மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்த ஆண்டு அக்டோபர் அல்லது நவம்பரில் சட்டசபைத் தேர்தல் நடக்கலாம்.

எதிர்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாதி கூட்டணியில், சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி), தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் அணி) மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில், மகாராஷ்டிராவில் எதிர்க்கட்சிகளான மகா விகாஸ் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

இந்தச் சட்டசபைத் தேர்தல் என்பது மகாராஷ்டிராவின் சுயமரியாதையை காப்பதற்கான போராட்டம்.

கடந்த பல தேர்தலில் பா.ஜ.க. உடனான கூட்டணி அனுபவம், அதிக எம்.எல்.ஏ.க்களைப் பெற கூட்டணியில் உள்ள பிற கட்சி வேட்பாளர்களை வீழ்ச்சியடைய செய்கின்றனர் என்பதை உணர்ந்திருக்கிறோம்.

அதனால் அதிக எம்.எல்.ஏ.க்கள் கொண்ட கட்சிக்கு முதல் மந்திரி பதவி என்ற கொள்கைக்கு ஆதரவளிக்கப் போவதில்லை.

மகா விகாஸ் அகாதியின் முதல் மந்திரி வேட்பாளர் யார் என்பதை நாங்கள் முடிவு செய்வோம். நான் அதனை ஆதரிப்பேன்.

காங்கிரஸ் கட்சியும், தேசியவாத காங்கிரஸ் கட்சியும் (சரத் பவார்) அவர்களின் முதல் மந்திரி வேட்பாளரை அறிவிப்பர். நான் அவர்களுக்கு ஆதரவு அளிப்பேன்.

ஏனென்றால் நாங்கள் மகாராஷ்டிராவின் முன்னேற்றத்துக்காக உழைக்கிறோம். மக்கள் விரும்புவது எங்களைத் தான், உங்களை அல்ல என தெரிவித்தார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com