கழுகுமலையில் தீப்பெட்டி தொழிற்சாலை குடோனில் தீ விபத்து

கழுகுமலையில் தீப்பெட்டி தொழிற்சாலை குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தீக்குச்சி மூட்டைகள் எரிந்து நாசமாயின.
கழுகுமலையில் தீப்பெட்டி தொழிற்சாலை குடோனில் தீ விபத்து
Published on

கழுகுமலை:

கழுகுமலை பஸ் நிலையம் அருகில் தீப்பெட்டி தொழிற்சாலை நடத்தி வருபவர் ராஜேந்திரன் (வயது 56). இவரது வீடு, தொழிற்சாலை வளாகத்தில் உள்ளது. நேற்று காலை 7 மணி அளவில் தொழிலாளர்கள் தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டு இருந்தனர். அப்போது தொழிற்சாலை வளாகத்தில் உள்ள குடோனில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.அந்த குடோனில் மருந்து முக்கிய தீக்குச்சிகளை மூட்டைகளில் அடைத்து வைத்து இருந்தனர். அவற்றில் தீப்பிடித்ததால் குடோன் முழுவதும் மளமளவென்று தீ பரவியது. இதனால் தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் அலறியடித்தவாறு வெளியே ஓடி வந்தனர்.

இதுகுறித்து கழுகுமலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) பொன்ராஜ் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்து முக்கிய தீக்குச்சி மூட்டைகள் எரிந்து நாசமாயின. மேலும் கட்டிடமும் சேதம் அடைந்தது.

தீயணைப்பு வீரர்கள் துரிதமாக வந்து தீயை அணைத்ததால், தீப்பெட்டி தொழிற்சாலைக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கழுகுமலை போலீசார் விசாரித்து வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com