

கும்பகோணம்:
சமூக ஆர்வலர் லோக. சந்திர பிரபு கூறியதாவது:-
தற்போது அனேக அரசு பள்ளிக்கூடங்கள் மாணவர்கள் வருகை இன்றி மூடப்பட்டு வருகிறது. பெரும் பாலானவர்கள் தனியார் கல்வி நோக்கி சென்று கொண்டிருப்பது தான் இதற்கு காரணம் என்று பலராலும் சொல்லப்பட்டாலும் இதை அரசு கருத்தில் கொண்டு பல புதிய முயற்சிகளை செயல்படுத்தி அரசு பள்ளிகள் மாணவர் சேர்க்கைகளை அதிகப்படுத்த முயற்சித்து வருகிறது.
இருந்தபோதிலும் தற்போது பெரும்பாலான அரசு பள்ளிகள் தற்போது மூடப்பட்டு வெறும் கட்டிடங்களாக காட்சியளித்து வருகின்றன. மூடப்பட்டுள்ள அரசு பள்ளி கட்டிடங்கள் அனைத்தையும் நூலகங்கள் ஆக மாற்றி வருவதாக அரசு அறிவித்துள்ளது வரவேற்புக்குரியது.
தற்போது இண்டர்நெட், ஸ்மார்ட் டி.வி, செல்போன் போன்ற பயன்பாடுகளின் அதிகரிப்பால் புத்தக வாசிப்பு குறைந்து வரும் இந்த வேளையில் நூலகத்தின் பயன்பாடுகள் எதிர்கால சந்ததியினருக்கு தேவைப்படுமா? என்ற கேள்வி உருவாகிவருகிறது.
அதேவேளையில் ஆதரவற்ற முதியோர்களின் எண்ணிக்கையையும் தமிழகத்தில் பெருவாரியான அளவிற்கு அதிகரித்து வருவது கவலை அளித்து வருகிறது மேலும் தெருவோரங்களில் வசிப்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருகிறது.வசதியுள்ள முதியோர்களுக்கு காப்பகங்கள் அமைத்து அதை ஒரு பெரிய வணிக நோக்கத்தோடு செயல்படுத்தியும் வருகின்றனர்.
இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு அரசு மூடியுள்ள பள்ளி வளாக கட்டிடங்களை ஆதரவற்றோர்களுக்கான முதியோர் காப்பகங்களாக மாற்றினால் தமிழக அரசுக்கு நற்பெயர் கிடைப்பதுடன் ஆதரவற்ற முதியோர்களுக்கு ஒரு நல்ல உறைவிட வாழ்வை அமைத்துக் கொடுப்பதற்கு வாய்ப்பாகவும் அமையும். எனவே தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.