தாமிரபரணி புஷ்கரம் நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு கேட்டவருக்கு அபராதம் - ஐகோர்ட்டு உத்தரவு

தாமிரபரணி புஷ்கரம் நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு கேட்டு வழக்கு தொடர்ந்தவருக்கு அபராதம் விதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #ThamirabaraniMahaPushkaram #Highcourt
தாமிரபரணி புஷ்கரம் நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு கேட்டவருக்கு அபராதம் - ஐகோர்ட்டு உத்தரவு
Published on

சென்னை:

நெல்லை மாவட்டம், தென்காசியை சேர்ந்தவர் ஈஸ்வரன் சித்தா. இவர், ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘நெல்லை மாவட்டம், தாமிரபரணியில் 12-ந்தேதி முதல் புஷ்கரம் தொடங்குகிறது. இந்த நிகழ்ச்சியில், கடவுள் நம்பிக்கை இல்லாத நாத்திகர்கள் புகுந்து பிரச்சினையை ஏற்படுத்தலாம்.

எனவே, நெல்லை மாவட்ட கலெக்டர் தலைமையில் போலீஸ் அதிகாரிகள் கொண்ட ஒரு கமிட்டியை உருவாக்கி, தகுந்த பாதுகாப்பை புஷ்கரம் நிகழ்ச்சிக்கு வழங்கவேண்டும் என்று உத்தரவிடவேண்டும்“ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் விசாரித்தனர். அப்போது இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆஜரான சிறப்பு அரசு பிளீடர் எம்.மகாராஜா, "நாத்திகர்கள் பிரச்சினை செய்ய வருவார்கள் என்று மனுதாரர் கற்பனை மற்றும் யூகத்தின் அடிப்படையில் குற்றம் சாட்டுகிறார். அவரிடம் அது தொடர்பான ஆதாரம் எதுவும் இல்லை. எனவே, மனுவை தள்ளுபடி செய்யவேண்டும்" என்று வாதிட்டார்.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், கற்பனை, யூகம் அடிப்படையில் பொதுநல வழக்கு தொடர கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு பல வழக்குகளில் தீர்ப்பு அளித்துள்ளது. எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்வதுடன் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கிறோம் என்று உத்தரவிட்டனர். #ThamirabaraniMahaPushkaram #Highcourt

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com