

திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை விடிய, விடிய பலத்த மழை பெய்தது. மழை காரணமாக திருவண்ணாமலை கடலைக்கடை சந்திப்பு, அறிவொளி பூங்கா உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
இரவு நேரத்தில் குளிர்ந்த காற்று வீசியது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த வேர்க்கடலை செடிகள் மற்றும் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால் ஏரிகளுக்கு நீர் வரத்து தொடங்கி உள்ளது. நேற்று முன்தினம் இரவு முதல் அதிகாலை வரை அதிக பட்சமாக கலசபாக்கத்தில் 87 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகியுள்ளது.
மாவட்டத்தின் மற்ற இடங்களில் பதிவான மழையளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
திருவண்ணாமலை - 22, செங்கம்- 46.6, தண்டராம்பட்டு- 66. போளூர் 46.2, ஆரணி - 52.4, கீழ்பென்னாத்தூர்- 38.4, வந்தவாசி- 51, செய்யாறு- 66, வெம்பாக்கம்- 69.6, சேத்துப்பட்டு-84, ஜமுனாமரத்தூர்- 56 ஆகும். மொத்த மழை அளவு 681.2 மில்லி மீட்டர் ஆகும்.