

சென்னை:
பொறியியல் மாணவர் சேர்க்கை தொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் கடந்த ஆண்டு பொறியியல் மாணவர் சேர்க்கையில் 152704 இடங்கள் நிரப்பப்பட்டன. இந்த ஆண்டு பிளஸ்2 தேர்வு முடிவு வெளியானதும் மாணவர் சேர்க்கைக்கான பணிகள் தொடங்கும். இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கான மொத்த காலி இடங்கள் மே 15ல் தெரியும்.
பொறியியல் படிப்புக்காக இணையதளங்களில் விண்ணப்பம் கோருவதற்கான அறிவிப்பு வரும் 29ம் தேதி வெளியிடப்படும். மே 3 முதல் கலந்தாய்வு விண்ணப்பங்கள் இணையதளங்களில் பதிவு செய்யலாம். விண்ணப்பங்களை இணையதளங்களில் பதிவு செய்வதற்கு மே 30 கடைசி நாள்.
ஆன்லைன் விண்ணப்பத்தின் ஒரிஜினல் சான்றிதழ்களை அனுப்ப தேவையில்லை. விண்ணப்பங்கள் பதிவ செய்வதற்காக தமிழகம் முழுவதும் 42 மையங்கள் திறக்கப்படும். இந்த உதவி மையங்களில் கணினிகள், அச்சுப்பொறிகள், பயிற்சி பெற்ற நபர்கள், குடிநீர் மற்றும் சிற்றுண்டி உள்ளிட்ட வசதிகள் இருக்கும். மையங்களில் பதிவு செய்ய கட்டணம் எதுவும் கிடையாது. சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள் ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும். பிளஸ் 2 தேர்வு முடிவுகள் சில நாட்கள் தள்ளிப்போனாலும் கலந்தாய்வில் பாதிப்பு ஏற்படாது.
இவ்வாறு அவர் கூறினார்.