search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தை விருது வழங்கும் விழா
    X

    திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தை விருது வழங்கும் விழா

    • இந்த ஆண்டுக்கான விருதுகள் வழங்கும் விழா நாளை மாலை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. விளையாட்டு திடலில் நடைபெறுகிறது.
    • விருது வழங்கும் விழாவில் பங்கேற்க தமிழகம் முழுவதும் இருந்தும் நிர்வாகிகள், தொண்டர்கள் பஸ், கார், வேன்களில் வருகிறார்கள்.

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் விருதுகள் வழங்கும் விழா ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது.

    ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்களுக்காக பாடுபட்டு வரும் தலித் அல்லாத சான்றோரை போற்றும் வகையில் புரட்சியாளர் அம்பேத்கர் பெயரில் அம்பேத்கர் சுடர் என்னும் விருது 2007-ம் ஆண்டு வழங்கப்பட்டது.

    2008-ம் ஆண்டு முதல் அம்பேத்கர் சுடர் விருதுடன் பெரியார் ஒளி, அயோத்தி தாசர் ஆதவன், காமராசர் கதிர், காயிதே மில்லத் பிறை மற்றும் செம்மொழி ஞாயிறு ஆகிய விருதுகளுடன் பல்வேறு துறைகளில் சாதனைகள் புரிந்து வரும் சான்றோருக்கு பாராட்டுப் பட்டயம், நினைவு கேடயம் ஆகியவற்றுடன் ரூ.50 ஆயிரம் பொற்கிழியும் வழங்கப்பட்டு வருகின்றன.

    2022-ம் ஆண்டு முதல் கார்ல்மார்க்ஸ் பெயரில் மார்க்ஸ் மாமணி என்னும் விருது வழங்கப்படுகிறது. இவ்விழா ஆண்டு தோறும் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டுக்கான விருதுகள் வழங்கும் விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. விளையாட்டு திடலில் நடைபெறுகிறது.

    விழாவிற்கு கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. தலைமை தாங்குகிறார். பொதுச்செயலாளர்கள் சிந்தனை செல்வன், துரை.ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். அம்பேத்கர் சுடர் விருது சி.பி.ஐ.எம்.எல்-விடுதலை பொதுச்செயலாளர் பட்டாச்சார்யாவுக்கும், பெரியார் ஒளி விருது இந்திய கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் ராஜாவுக்கும், காமராஜர் கதிர் விருது தமிழக சபாநாயகர் அப்பாவுக்கும் வழங்கப்படுகிறது.

    மார்க்சிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணனுக்கு மார்க்ஸ் மாமணி விருது, டெல்லி முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபால் கவுதமிற்கு அயோத்தி தாசன் விருது, காயிதே மில்லத் பிறை விருது பெங்களூரு சட்டப் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் முனைவர் மோகன் கோபாலுக்கும், செம்மொழி ஞாயிறு விருது தமிழறிஞர் தாயம்மாள் அறவாணனுக்கும் திருமாவளவன் வழங்கி கவுரவிக்கிறார்.

    விருது வழங்கும் விழாவில் பங்கேற்க தமிழகம் முழுவதும் இருந்தும் நிர்வாகிகள், தொண்டர்கள் பஸ், கார், வேன்களில் வருகிறார்கள்.

    எம்.எல்.ஏ.க்கள் எஸ்.எஸ்.பாலாஜி, ஆளூர் ஷாநவாஸ், பனையூர் பாபு மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகள் உஞ்சை அரசன், வன்னிய அரசு, பாவரசு, பாலசிங்கம், தயாளன், பாவலன், வீர.ராஜேந்திரன், சென்னை மாவட்ட செயலாளர்கள் இரா.செல்வம், ந.செல்லத்துரை, வி.கோ.ஆதவன், அம்பேத்வளவன் விசங்கர், கவுன்சிலர்கள் யாழினி உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    Next Story
    ×