

சென்னை:
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பிரதமர் மோடி மார்ச் 22-ம் தேதி சுய ஊரடங்கு கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து, நாடு முழுவதும் இன்று காலை 7 மணி முதல் சுய ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
பிரதமர் மோடி அறிவித்துள்ள சுய ஊரடங்கை முன்னிட்டு நாடு முழுவதும் சினிமா அரங்குகள், ஓட்டல்கள், வணிக நிறுவனங்கள், சிறிய, பெரிய கடைகள் ரெயில், பஸ், விமான போக்குவரத்துகள் இன்று இயங்கவில்லை.
மக்கள் ஊரடங்கு அறிவிப்பை ஏற்று தமிழக அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அரசு பஸ்கள் ஓடாது என அறிவித்து உள்ளது. ஆம்னி பஸ்கள், மெட்ரோ ரெயில்கள், நீண்டதூர ரெயில்கள் இயக்கமும் நிறுத்தப்பட்டுள்ளது. கோயம்பேடு மொத்த மார்க்கெட்டும் இன்று அடைக்கப்பட்டுள்ளது. தமிழக எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.
சென்னையில் மெரினா, பெசன்ட்நகர், திருவான்மியூர் உள்பட கடற்கரைகள் அடைக்கப்பட்டுள்ளது. பொழுதுபோக்கு தலங்களும் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஆட்டோக்கள் மற்றும் லாரிகள் ஓடவில்லை. கால் டாக்சிகளும் ஓடவில்லை. மக்கள் ஊரடங்கையொட்டி இன்று 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.