

புதுடெல்லி:
காவிரி பிரச்சனையில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தக் கோரி தமிழக அரசு மற்றும் அனைத்து கட்சிகளும் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. 6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு விதித்த கெடு முடிந்தும் காவிரி பிரச்சனையில் எந்த முடிவையும் மத்திய அரசு இன்னும் எடுக்கவில்லை.
இந்நிலையில், காவிரி விவகாரத்துக்காக எனது பதவியை ராஜினாமா செய்கிறேன் என அ.தி.மு.க. மாநிலங்களவை எம்.பி முத்துக்கருப்பன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி எனது எம்.பி பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளேன். எனது ராஜினாமா கடிதத்தை நாடாளுமன்றத்தில் அவைத்தலைவரிடம் அளிக்கவுள்ளேன். மக்களுக்காக எனது பதவியை ராஜினாமா செய்கிறேன்.
மக்களுக்கும் மாநிலத்துக்கும் சேவை செய்யவே எம்.பி பதவி. நான் ராஜினாமா செய்வது எனது தனிப்பட்ட முடிவு. நாங்கள் நாடாளுமன்ற கூட்டம் தொடங்கியதில் இருந்தே போராடி வந்தோம்.
விவசாயிகள் பிரச்சினையில் அரசியல் செய்ய வேண்டாம் எனக்கூறி வந்தேன். காவிரி விவகாரம் தொடர்பாக பா.ஜ.க. தலைவர் அமித்ஷாவிடம் வலியுறுத்தி வந்தேன்.
இவ்வாறு அவர் கூறினார். #admk #mpmuthukaruppan #cauveryissue #Tamilnews