

எச்.வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ படம் வருகிற 23-ந் தேதி திரைக்கு வருகிறது.
கடந்த ஜனவரி மாதம் 9-ந் தேதி திரைக்கு வர இருந்த ‘ஜன நாயகன்’ படம் தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால் திரைக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டது.
கடந்த 6 மாதமாக தணிக்கை வாரியத்தின் பரிசீலனையில் இருந்து வந்த ‘ஜன நாயகன்’ படத்திற்கு சமீபத்தில் ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்நிலையில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். புரொடக்ஷன்ஸ் ‘ஜன நாயகன்’ படம் வருகிற 23-ந் தேதி உலகமெங்கும் வெளியாகும் என அறிவித்துள்ளது.
தமிழகத்தில் மட்டும் சுமார் 950 திரையரங்குகளில் ‘ஜன நாயகன்’ படம் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் பல்வேறு மாநிலங்களிலும் நாடுகளிலும் சுமார் 3000 திரையரங்குகளில் படம் வெளியாக இருப்பதாக ‘ஜன நாயகன்’ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதலமைச்சர் விஜய்யின் கடைசி படமாக ‘ஜன நாயகன்’ வருவதால் ரசிகர்கள் உற்சாகமாக படத்தை கொண்டாட காத்திருக்கின்றனர்.
1972-ல் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கிய போது முடிக்கப்படாமல் இருந்த படங்களை நடித்து முடிப்பதற்காக பதவி ஏற்பு விழாவை ஒத்தி வைத்தார். 1977-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஜூன் 30-ந் தேதி எம்.ஜி.ஆர். முதலமைச்சராக பதவி ஏற்ற பிறகு மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன், மீனவ நண்பன் படம் வெளியானது.
இதேபோல் முதலமைச்சராக விஜய் பதவி ஏற்றுக்கொண்ட பின் அவர் நடிப்பில் உருவான ‘ஜன நாயகன்’ படம் திரைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.