search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விடைத்தாள் மறுமதிப்பீட்டில் ஊழல்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - ராமதாஸ்
    X

    விடைத்தாள் மறுமதிப்பீட்டில் ஊழல்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - ராமதாஸ்

    அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் மறுமதிப்பீடு ஊழல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் நிரூபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #Ramadoss #RevaluationScam #AnnaUniversityRaid

    சேலம்:

    சேலத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நிரூபர்களிடம் கூறியதாவது-

    ஒரு அரசு விழாவில் எடப்பாடி பழனிசாமி பேசும்போது தமிழகத்தில் வளர்ச்சிக்கான திட்டங்ளை நிறைவேற்றி வருவதாகவும், மக்களுக்கு எது நன்மை என்பதை அறிந்து அவற்றை செய்து வருவதாகவும் கூறியிருக்கிறார். இவை அனைத்தும் பச்சைப் பொய்.

    அதாவது, திராவிட கட்சிகள் மேடையில் பேசுவார்கள் ஜமுக்காலத்தில் வடி கட்டுன பொய் என்பார்கள். அந்த மாதிரி பச்சைப்பொய். அவர் பதவி ஏற்று 1½ வருடங்கள் ஆகிறது. தமிழகத்தின் வளர்ச்சிக்காக ஒரு திட்டத்தையாவது அவரால் சொல்ல முடியுமா?.

    உண்மையில் பார்க்கும் போது, முன்னேறுவதற்கு பதிலாக தமிழகம் பின் நோக்கி செல்கிறது. எல்லா துறைகளிலும். ஆனால் ஒன்று மட்டும் முன்னேறி செல்கிறது. அது ஊழல். கடந்த ஆண்டில் மட்டும் மோட்டார் வாகனத்துறையில் தமிழகத்திற்கு வரவேண்டிய 25 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கும், தெலுங்கானாவுக்கும் போயிருக்கிறது. இதற்கு காரணம் ஊழல்.

    அதே மாதிரி கடந்த ஓராண்டில் 50 ஆயிரம் சிறு, குறு தொழில்கள் மூடப்பட்டுள்ளது. அதற்கு முக்கிய காரணம் ஜி.எஸ்.டி.வரி. இதில் 5 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். தொழில் மற்றும் வணிகம் செய்வதற்கு ஏற்ற மாநில பட்டியலில் தமிழகம் 15-வது இடத்தில் இருக்கிறது.

    இந்த 6 ஆண்டுகளில் 9 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்திருக்க வேண் டும். ஆனால் 9 ஆயிரம் கோடி ரூபாய் கூட செலவிடப்படவில்லை. எடப்பாடி பழனிசாமி பதவி காலத்தில் மட்டும் 2 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஊழல் தான் அதிகரித்துள்ளது. இவருடைய பதவி காலதத்தில் 5 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் நெடுஞ்சாலை திட்டங்களுக்கு ஒப்பந்தம் வழங்குவதில் ஊழல்.


    டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 அதிகாரிகள் தேர்வில் ஊழல், மணல் கொள்ளையில் ஊழல், தாதுமணல் கொள்ளையில் ஊழல், மின்சார கொள்முதல் ஊழல், அரசுத்துறை பணியாளர்கள் நியமனத்தில் ஊழல், மருத்துவக் காப்பீட்டில் ஊழல், குட்கா ஊழல், வாக்கி டாக்கி ஊழல் என ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது.

    இவருடைய ஆட்சியால் தான் வளர்ச்சிக்கான திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருவதாக சிலர் வாய்கிழிய பேசுகிறார்கள். அவரது ஆட்சியில் பெருகியது வளர்ச்சியா? அல்லது ஊழலா? என்பது குறித்து பொது வாக்கெடுப்பு நடத்த எடப்பாடி பழனிசாமி தயாரா?

    2016-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தி இருக்க வேண்டும். இதனால் தமிழகத்திற்கு மத்திய அரசு கொடுக்க வேண்டிய பணம் 3558 கோடி. உள்ளாட்சி தேர்தலை நடத்தினால் தான் அவர்கள் கொடுப்பார்கள். இவர்கள் அந்த பணத்தை தேர்தல் நடத்தாமலே கேட்டுப் பார்த்தார்கள். அவர்கள் முடியாது என்று விட்டனர்.

    உயர் நீதிமன்ற வழக்கில் இருக்கிறது என்கின்றனர். உயர் நீதிமன்றம் உள்ளாட்சி தேர்தலை ஏன்? நடத்தவில்லை என்று கேட்கிறது. இதைவிட வேடிக்கை என்னவென்றால் உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் அட்டவணையை தெரிவிக்காவிட்டால் மாநில தேர்தல் ஆணையர் சிறை செல்ல நேரிடும் என்று உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது. ஆகவே இதன் மூலமாக உள்ளாட்சி தேர்தலை நடத்த எந்த தடையும் இல்லை என்று தெரிகிறது.

    ஏன் தேர்தலை நடத்த வில்லை என்றால் தேர்தலை நடத்தினால் படுதோல்வி அடைந்து விடுவார்கள் என்று அவர்களுக்கு தெரிகிறது. இதனால் தேர்தலை நடத்த மாட்டார்கள்.

    தமிழ்நாட்டில் இனி பிளஸ்-2 படித்தாலே வேலை கிடைக்கும் என்று சொல்லி இருக்கிறார். 80 லட்சம் பேர் பிளஸ்-2 படித்து முடித்தவர்கள், அதற்குமேல் படித்து முடித்தவர்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து இருக்கிறார்கள். 1 கோடி பேர் பதிவு செய்யாமல் இருக்கிறார்கள். இந்த 1½ வருடத்தில் எத்தனை பேருக்கு வேலை கொடுத்து இருக்கிறார்? ஜெயலலிதா இருக்கும்போது இந்த கேள்வியை நாங்கள் கேட்டுக் கொண்டேதான் இருந்தோம். அரசு வேலையில் 5 லட்சம் காலியிடங்கள் பல வருடங்களாக இருக்கிறது. இப்போது எப்படியும் 10 லட்சம் காலிஇடம் இருக்கும். இதை அவர்கள் நிரப்பவே இல்லை.

    அண்ணா பல்கலைக் கழகத்தில் நடந்த ஊழல் குறித்து நான் அறிக்கை கொடுத்திருந்தேன். தமிழ்நாட் டில் 21 பல்கலைக்கழகங்களில் 20 பல்கலைழக்கழகங்களுக்கு வேந்தர் கவர்னர் ஆவார். ஒரு பல்கலைக்கழகத்திற்கு மட்டும் வேந்தர் முதல்-அமைச்சர். அது இசைப்பல்கலைக்கழகம்.

    இதில் அண்ணா பல்கலைக்கழகத்தில் விடைத்தாள் மறு மதிப்பீடு செய்ததில் 1000 கோடிக்கு ஊழல் என்று சொல்லி இருந்தோம். இது குறித்து விரிவான விசாரணை வேண்டும் என சொல்லியிருந்தோம். பூதம் கிளம்புற மாதிரி, ஒரு ஊழல் அடங்குவதற்குள் மேலும் பல ஊழல்கள் வெளிவர தொடங்கி உள்ளன.

    ஒரு ஆண்டுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் 2 லட்சம் விடைத்தாள்கள் மட்டும் தான் தேவை. ஆனால் இவர்கள் 10 ஆண்டுகளுக்கு தேவையான 20 லட்சம் விடைத்தாள்களை கூடுதலாக அச்சடித் திருக்கிறார்கள். இதன் மூலமாக ரூ.60 கோடி இழப்பு ஏற்பட்டு இருக்கிறது. அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் மறுமதிப்பீடு ஊழல் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

    பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசைக்கும், எங்களுக்கும் இடையேயான பிரச்சினை முடிந்து விட்டது. பாராளுமன்ற தேர்தல் குறித்து ஜனவரி மாதத்தில் முடிவு எடுப்போம். அன்புமணி பிரதமர் வேட்பாளர் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #Ramadoss #RevaluationScam #AnnaUniversityRaid

    Next Story
    ×