தமிழ்நாடு

வாக்குப்பதிவுக்கான மின்னணு எந்திரங்களை 18-ந்தேதி வாக்குச்சாவடிகளுக்கு அனுப்ப ஏற்பாடு

Published On 2024-04-15 10:37 GMT   |   Update On 2024-04-15 10:37 GMT
  • அறைக்கு சீல் வைத்து துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.
  • மின்னணு எந்திரங்களை வருகிற 18-ந்தேதி அந்தந்த வாக்குச் சாவடிகளுக்கு கொண்டு செல்ல வேண்டும்.

சென்னை:

தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் 19-ந்தேதி நடைபெற இருப்பதையொட்டி வாக்குப்பதிவுக்கான மின்னணு எந்திரங்கள் தொகுதி வரியாக ஒதுக்கப்பட்டு வேட்பாளரின் பெயர், சின்னங்கள் பொருத்தப்பட்டு பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது. அந்த அறைக்கு சீல் வைத்து துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.

சட்டசபை தொகுதி வாரியாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பிரிக்கப்பட்டு அதற்கான அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த நிலையில் இப்போது அதற்கு அடுத்த படியாக உள்ள அதிகாரிகளுக்கு அவற்றை ஒதுக்கீடு செய்து பிரிக்கும் பணி இன்று நடைபெறுகிறது.

சென்னையில் 16 இடங்களில் உள்ள பயிற்சி சென்டரில் இந்த பணிகள் இன்று நடைபெற உள்ளது.

தேர்தல் நடைபெறும் சம்பந்தப்பட்ட வார்டு வாக்காளர் பட்டியல், வாக்குச்சாவடி தலைமை அலுவலர், தேர்தல் விவர குறிப்பேடு, முகவர்களுக்கு நுழைவு அனுமதி சீட்டு, வாக்குப்பதிவு செய்யும் இடம் என உள்ளே வெளியே போன்ற இடங்களை குறிக்கும் போஸ்டர்கள், மெழுகு வர்த்திகள், சணல் கயிறு, வாக்குச் சாவடி தலைமை அலுவலருக்கான கையேடு, வாக்குப்பதிவு எந்திரத்தை பயன்படுத்துவதற்கான பயிற்சி புத்தகம், மறைவு அட்டை, வாக்குச் சாவடி தலைமை அலுவலர் பயன்படுத்தும் உறைகள் உள்பட 80 பொருட்களை பிரித்து வைக்கும் பணி இன்று நடைபெறுகிறது.

இந்த பணியை மாநகராட்சி ஆணையரான மாவட்ட தேர்தல் அதிகாரி டாக்டர் ராதாகிருஷ்ணன் பார்வையிடுகிறார்.

இந்த பொருட்களுடன் மின்னணு எந்திரங்களை வருகிற 18-ந்தேதி அந்தந்த வாக்குச் சாவடிகளுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதுவரை இந்த பொருட்கள் அந்தந்த மையத்தில் தாசில்தார் மேற்பார்வையில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News