search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெர்மனி: எதிர்க்கட்சிகள் ஆதரவுடன் ஏஞ்சலா மெர்க்கல் மீண்டும் ஆட்சி அமைக்கிறார்
    X

    ஜெர்மனி: எதிர்க்கட்சிகள் ஆதரவுடன் ஏஞ்சலா மெர்க்கல் மீண்டும் ஆட்சி அமைக்கிறார்

    ஜெர்மனி பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல்லின் பழமைவாத கூட்டணி 246 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இழுபறி நிலை காரணமாக எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் அவர் மீண்டும் ஆட்சி அமைக்கிறார்.
    பெர்லின்:

    ஜெர்மனி பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல்லின் பழமைவாத கூட்டணி 246 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இழுபறி நிலை காரணமாக எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் அவர் மீண்டும் ஆட்சி அமைக்கிறார்.

    வலிமையான ஐரோப்பிய நாடுகளில் ஒன்றாக திகழும் ஜெர்மனியில் 2005-ம் ஆண்டு முதல் ஏஞ்சலா மெர்க்கல் பிரதமராக பதவி வகித்து வருகிறார். 3 முறை தொடர்ச்சியாக வெற்றி பெற்றவர் என்ற சிறப்பும் அவருக்கு உண்டு.

    இந்த நிலையில் ஜெர்மனியில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் பாராளுமன்ற தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. இதில் ஏஞ்சலா மெர்க்கலின் பழமைவாத கட்சி (சி.டி.யூ.) மற்றும் ஹோர்ஸ்ட் சீஹோபரின் கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியம் (சி.எஸ்.யூ.) ஆகியவை கூட்டணி அமைத்து போட்டியிட்டன.



    கடந்த முறை ஏஞ்சலா மெர்க்கலுடன் கூட்டணி அமைத்து இருந்த சமூக ஜனநாயக கட்சியான எஸ்.பி.டி. இம்முறை தனித்து தேர்தலை சந்தித்தது. இது தவிர, ஏ.எப்.டி., எப்.டி.எப்., டி லிங்கே, கிரீன் ஆகிய 4 முக்கிய கட்சிகளும் களம் கண்டன. ஜெர்மனி அரசியலில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு பல முனை போட்டி நிலவியதால் தேர்தல் முடிவுகள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டது. ஜெர்மனி பாராளுமன்றத்தின் புதிய நடைமுறைப் படி மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 709 ஆகும்.

    நேற்று முன்தினம் ஓட்டுப் பதிவு முடிந்ததும், ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. இதில் தொடக்கத்தில் இருந்தே ஏஞ்சலா மெர்க்கலின் பழமைவாத கூட்டணி முன்னணி பெற்றது. ஏஞ்சலா 4-வது முறையாக எம்.பி.யாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். எனினும், பல முனை போட்டி நிலவியதால் அவருடைய கூட்டணிக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. 246 இடங்களையே அந்த கூட்டணி கைப்பற்றியது. மேலும், கடந்த முறை அந்த கூட்டணி பெற்ற ஓட்டுகள் 41.5 சதவீதத்தில் இருந்து 32.9 சதவீதமாக சரிந்தது.

    அதே நேரம், அகதிகளுக்கு அடைக்கலம் அளிப்பது தொடர்பான விவகாரத்தில் ஏஞ்சலா மெர்க்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பழமைவாத கூட்டணியில் இருந்து தேர்தலுக்கு முன்பே விலகிய எஸ்.பி.டி. கட்சி 153 இடங்களை கைப்பற்றியது. ஏ.எப்.டி. 94 இடங்களிலும், எப்.டி.எப். 80, டி லிங்கே, 69, கிரீன் கட்சி 67 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. இதனால் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.

    தொகுதி வேட்பாளர்களுக்கு ஒரு ஓட்டு, பிடித்தமான தலைவருக்கு ஒரு ஓட்டு என்னும் இரட்டை ஓட்டு என்ற நடைமுறை ஜெர்மனியில் உள்ளது. இதனால் அதிக இடங்களை வென்ற கூட்டணி என்ற விதத்திலும், பிடித்த தலைவர்களில் அதிக சதவீத ஓட்டுகளை பெற்றவர் என்பதன் அடிப்படையிலும் ஏஞ்சலா மெர்க்கல் 4-வது முறையாக பிரதமர் ஆகிறார். எனினும் அவர் எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி அமைத்துத்தான் ஆட்சியை அமைக்க முடியும்.

    அவர் ஜனநாயக விடுதலை கட்சியான எப்.டி.எப். மற்றும் கிரீன் கட்சி ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்த தேர்தலில் ஜெர்மனிக்கு மாற்று என்னும் ஏ.எப்.டி. கட்சியும் போட்டியிட்டது. சர்வாதிகாரி ஹிட்லரின் கொள்கைகளை பின்பற்றும் ஏ.எப்.டி. கட்சி யாருமே எதிர்பாராத விதமாக 94 இடங்களை கைப்பற்றி 25 ஆண்டுகளுக்கு பிறகு ஜெர்மனி பாராளுமன்றத்தில் மீண்டும் காலடி எடுத்து வைத்துள்ளது. அந்த கட்சிக்கு 13 சதவீத ஓட்டுகள் கிடைத்தன.

    மேலும் இரண்டாம் உலகப் போருக்கு பிறகு ஜெர்மனி பாராளுமன்றத்தில் 6 பெரிய கட்சிகள் இடம்பெறுவது இதுவே முதல் முறை ஆகும்.

    எஸ்.பி.டி. கட்சியின் தலைவர் மார்க் சூல்ட்ஸ், தனது கட்சி பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக செயல்படும் என்று அறிவித்து உள்ளார். 2-ம் இடத்தை பிடித்த இவருடைய கட்சிக்கு 20.6 சதவீத ஓட்டுகள் கிடைத்தன. 
    Next Story
    ×