search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    21 வயது பெண்ணை காதலித்து மணந்த 19 வயது வாலிபர்
    X

    21 வயது பெண்ணை காதலித்து மணந்த 19 வயது வாலிபர்

    பெருந்துறை அருகே 19 வயது வாலிபர் 21 வயது பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் செல்லாது என கூறிய அதிகாரிகள் 21 வயது தொடங்கியதும் அவர் திருமணம் செய்து கொள்ளலாம் என அறிவுறுத்தினர்.
    பெருந்துறை:

    பெருந்துறையை அடுத்துள்ள திருவாச்சி, வாவிக்கடை காலனி பகுதியை சேர்ந்த வீரன் என்பவரது மகன் மவுலிதரன் (வயது 19). இதே பகுதியை சேர்ந்த இவரது உறவினர் சண்முகம் என்பவரது மகள் புவனேஷ்வரி(21).

    இவர்கள் இருவரும் பெருந்துறை சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஒன்றாக வேலை பார்த்து வந்தனர். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளும் உறவு முறை என்பதால் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர்.

    அவர்கள் தங்கள் வயது வித்தியாசம் பார்க்காமல் தீவிரமாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் ஆடி மாதம் பிறப்பதற்கு முன்பே திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து வீட்டுக்கு தெரியாமல் கடந்த ஞாயிற்றுக்கிழமை கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

    இதையறிந்த இரு வீட்டாரும் நேராக பேசி சமாதானம் செய்து கொண்டனர். அதன் பிறகு சம்பந்தி விருந்து தடல் புடலாக நடந்தது.

    இந்த திருமணம் பற்றி சமூக நலத்துறைக்கு அந்த பகுதியை சேர்ந்த யாரோ 17 வயது சிறுவன் 21 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக தகவல் கொடுத்துள்ளார்.

    இது தொடர்பாக சமூக நலத்துறை அதிகாரிகள், குழந்தைகள் நல அலுவலருக்கு தகவல் கொடுத்து சம்பவ இடத்திற்கு வந்தனர். குழந்தைகள் நல அலுவலர் சுரேஷ் மேற்கொண்ட விசாரணையில் மவுலிதரன் 19 வயது தான் பூர்த்தியானவர் என்பது தெரியவந்தது. ஆனால் இந்திய திருமண சட்டத்தின் படி திருமணம் செய்து கொள்வதற்கான ஆணின் வயது 21 என்பதால் இந்த திருமணம் சட்டப்படி செல்லாது என கூறி அவர்கள் இருவரையும் பிரித்து அவரவர் பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

    இதை மீறி இருவரையும் சேர்த்து வைத்தால் இருவரது பெற்றோர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.

    ஆணின் திருமண வயது 21. தற்போது மவுலிதரனுக்கு 19 வயது ஆகிறது. 21 வயது தொடங்கியதும் அவர் தாராளமாக திருமணம் செய்து மண வாழ்க்கையை தொடங்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அதன்படி இருவரது வீட்டு பெற்றோரும் திருமண வயது ஆனதும் மீணடும் உறவினர்களை அழைத்து விருந்து வைத்து காதலர்களை சேர்த்து வைக்க முடிவு செய்து உள்ளனர்.
    Next Story
    ×