search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பயிற்சியில் சென்னையின் எப்.சி. வீரர் தனபால் கணேஷ்.
    X
    பயிற்சியில் சென்னையின் எப்.சி. வீரர் தனபால் கணேஷ்.

    ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை - ஜாம்ஷெட்பூர் அணிகள் இன்று மோதல்

    ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியின் இன்றைய ஆட்டத்தில் சென்னை -ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதுகின்றன.
    ஜாம்ஷெட்பூர்:

    10 அணிகள் இடையிலான 4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. 4 நாட்கள் ஓய்வுக்கு பிறகு இன்று (வியாழக்கிழமை) நடைபெறும் 33-வது லீக் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் எப்.சி.யும், முன்னாள் சாம்பியன் சென்னையின் எப்.சியும் மோதுகின்றன. இந்த ஆட்டம் ஜாம்ஷெட்பூரில் அரங்கேறுகிறது.

    4 வெற்றி, ஒரு டிரா, 2 தோல்வி என்று இதுவரை 13 புள்ளிகள் பெற்று, சென்னையின் எப்.சி. அணி ‘நம்பர் ஒன்’ இடத்தில் உள்ளது. முந்தைய ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்சுடன் டிரா செய்த சென்னை வீரர்கள் வெற்றிப்பாதைக்கு திரும்புவதில் தீவிரமாக இருக்கிறார்கள். ஜெஜெ லால்பெகுலா (3 கோல்), ரபெல் அகஸ்டா (2 கோல்), இனிகோ கால்ட்ரோன் (2 கோல்), தனபால் கணேஷ் (1 கோல்) ஆகிய நட்சத்திர வீரர்கள் சென்னை அணியின் வெற்றிப்பயணத்தில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.

    அறிமுக அணியான ஜாம்ஷெட்பூர் தடுப்பாட்டத்தில் பலம் மிகுந்ததாக விளங்குகிறது. 6 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 3 டிரா, ஒரு தோல்வி என்று 9 புள்ளியுடன் 6-வது இடத்தில் உள்ளது.

    ஜாம்ஷெட்பூர் ஆடிய முதல் 3 ஆட்டங்களில் ஒரு கோல் கூட அடிக்கப்படவில்லை. அடுத்த 3 ஆட்டங்களில் ஒரு கோல் தான் வெற்றி தோல்வியை தீர்மானித்தன. இதுவரை அந்த அணி 2 கோல்கள் அடித்து, ஒரு கோல் மட்டுமே விட்டுக்கொடுத்திருக்கிறது. அதனால் அவர்களின் தடுப்பு அரணை உடைக்க சென்னை வீரர்கள் கன கச்சிதமாக செயல்பட வேண்டியது அவசியமாகும்.

    சென்னையின் எப்.சி. பயிற்சியாளர் ஜான் கிரிகோரி கூறுகையில், ‘ஜாம்ஷெட்பூருக்கு எதிரான ஆட்டம் எளிதானதாக இருக்காது. தங்களை தோற்கடிப்பது கடினம் என்பதை அவர்கள் நிரூபித்து இருக்கிறார்கள். அவர்கள் அதிகமான கோல்கள் அடிக்கவும் இல்லை, விட்டுக்கொடுக்கவும் இல்லை. அவர்களின் பயிற்சியாளர் ஸ்டீவ் கோப்பெல் எனக்கு நன்கு தெரியும். அவர் தனது அணியை நன்றாக தயார் செய்து வைத்திருப்பார்’ என்றார்.

    ஜாம்ஷெட்பூர் பயிற்சியாளர் ஸ்டீவ் கோப்பெல் கூறுகையில், ‘கணிசமான கோல்கள் அடிக்க வேண்டும் என்பதே எங்களது பிரதான இலக்கு. அதற்காக கடினமாக உழைக்கிறோம். கோல் வாங்கக்கூடாது என்ற மனநிலையில் மட்டுமே விளையாடினால் கால்பந்தில் சாதிக்க முடியாது. காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அனாஸ் எடதோடிகா இந்த ஆட்டத்தில் விளையாடமாட்டார். அதே சமயம் நடுகள வீரர் மெக்தாப் ஹூசைன் உடல் தகுதி பெற்று விட்டார்.’ என்றார்.

    இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
    Next Story
    ×