search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புரோ கபடி லீக் போட்டி: தமிழ் தலைவாஸ்-உ.பி. இன்று மோதல்
    X

    புரோ கபடி லீக் போட்டி: தமிழ் தலைவாஸ்-உ.பி. இன்று மோதல்

    புரோ கபடி லீக்கில் இன்று இரவு 9 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்- உ.பி. யோதா அணிகள் மோதுகின்றன.
    சென்னை:

    5-வது புரோ கபடி ‘லீக்’ போட்டியின் 10-வது கட்ட ஆட்டங்கள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.

    இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் உள்ள மும்பை- அரியானா அணிகள் மோதுகின்றன.

    சுரேந்தர் நாடா தலைமையிலான அரியானா அணி 18 ஆட்டத்தில் விளையாடி 9 வெற்றி, 5 தோல்வி, 4 டையுடன் 59 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது. அந்த அணி மும்பையை வீழ்த்தி 10-வது வெற்றியை பெறும் ஆர்வத்துடன் உள்ளது.

    மும்பையுடன் அந்த அணி 2 முறை தோற்று உள்ளது. இதற்கு இன்றைய ஆட்டத்தில் அரியானா பதிலை கொடுக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    மும்பை அணி 10 வெற்றி, 8 தோல்வியுடன் 54 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது. அந்த அணி அரியானாவை 3-வது முறையாக வீழ்த்தி 11-வது வெற்றியை பெறும் ஆர்வத்துடன் உள்ளது.

    இரவு 9 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் உள்ள தமிழ் தலைவாஸ்- உ.பி. யோதா அணிகள் மோதுகின்றன.

    அஜய் தாக்கூர் தலைமையிலான தமிழ் தலைவாஸ் 17 ஆட்டத்தில் 4 வெற்றி, 11 தோல்வி, 2டையுடன் 34 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் உள்ளது. தொடர்ந்து தோல்வியை சந்தித்து வரும் தமிழ் தலைவாஸ் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்டது.

    சொந்த மண்ணான சென்னையில் தொடர்ச்சியாக 4 ஆட்டங்களில் தோற்றது. ரசிகர்களுக்காகவாவது தமிழ் தலைவாஸ் வீரர்கள் சென்னையில் நடைபெறும் எஞ்சிய 2 ஆட்டத்தில் வெல்ல வேண்டும். உ.பி. அணியுடன் ஏற்கனவே ஒரு முறை வென்றது. மற்றொரு முறை ‘டை’ செய்தது.

    நிதின் தோமர் தலைமையிலான உ.பி. யோதா 6 வெற்றி, 8 தோல்வி, 4 டையுடன் 49 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் இருக்கிறது. அந்த அணி தமிழ் தலைவாஸ் அணிக்கு பதிலடி கொடுத்து 7-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.
    Next Story
    ×