search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்டட்கார்ட் ஓபன் டென்னிஸ்: ஷரபோவா அரையிறுதிக்கு முன்னேற்றம்
    X

    ஸ்டட்கார்ட் ஓபன் டென்னிஸ்: ஷரபோவா அரையிறுதிக்கு முன்னேற்றம்

    ஊக்கமருந்து தடையில் இருந்து திரும்பிய ஷரபோவா 15 மாதங்களுக்குப் பிறகு தனது முதல் தொடரிலேயே அரையிறுதி போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.
    ரஷியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா. டென்னிஸ் விளையாட்டைக் கடந்து விளம்பரங்கள் மூலமாகவும் கோடிக்கணக்கில் சம்பாதித்தவர். கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின்போது தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை (மெல்டோனியம்) பயன்படுத்தியதாக அவருக்கு தடைவிதிக்கப்பட்டது. இதனால் ஆஸ்திரேலிய ஓபன் காலிறுதியில் செரீனா வில்லியம்ஸிற்கு எதிராக தோல்வியடைந்த போட்டிக்குப் பிறகு களம் இறங்கவில்லை.

    சுமார் 15 மாதங்கள் கழித்து தற்போது ஸ்டட்கார்ட் ஓபனில் களமிறங்கியுள்ளார். இந்த தொடரை நடத்துபவர்கள் ஷரபோவாவிற்கு ‘வைல்டுகார்டு’ அளித்தனர். இதற்கு கடும் விமர்சனம் எழுந்தது.

    இந்நிலையில் வைல்டு கார்டு சிறப்புடன் களம் இறங்கிய ஷரபோவா முதல் சுற்று ஆட்டத்தில் வின்சியை எதிர்கொண்டார். இதில் ஷரபோவா 7-5, 6-3 என வெற்றி பெற்று முத்திரை பதித்தார். 2-வது சுற்றில் சக நாட்டு வீராங்கனையான எகாடெரினா மகரோவாவை எதிர்கொண்டார். இதில் ஷரபோவா 7-5, 6-1 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    இன்று நடைபெற்ற காலிறுதியில் ஷரபோவா, எஸ்டோனியாவின் அனெட் கொன்டாவெய்ட்டை எதிர்கொண்டார். இதில் ஷரபோவா 6-3, 6-4 என எளிதில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். 15 மாதங்களுக்குப் பின் களமிறங்கிய ஷரபோவா, தனது முதல் மூன்று ஆட்டத்தில் நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று அசத்தியுள்ளார்.



    மரியா ஷரபோவா மே மாதம் 7-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை நடக்கும் மாட்ரிட் தொடரில் விளையாடுவதற்கும், மே 15-ந்தேதியில் இருந்து 21-ந்தேதி வரை நடக்கும் ரோம் தொடரில் விளையாடுவதற்கும் ‘வைல்டுகார்டு’ பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கிராண்ட் ஸ்லாம் தொடரான பிரெஞ்ச் ஓபனில் விளையாட ‘வைல்டுகார்டு’ கிடைக்குமா? என்பது அடுத்த மாதம்தான் தெரியவரும்.
    Next Story
    ×