search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெசவாளர்கள் புதிய துணி தயாரிப்பு திட்டம்: தென்மண்டல இயக்குனருடன் அமைச்சர் கந்தசாமி ஆலோசனை
    X

    நெசவாளர்கள் புதிய துணி தயாரிப்பு திட்டம்: தென்மண்டல இயக்குனருடன் அமைச்சர் கந்தசாமி ஆலோசனை

    நெசவு தொழிலில் புதிய திட்டங்கள் செயல்படுத்துவது தொடர்பாக தென்மண்டல இயக்குனருடன் புதுவை அமைச்சர் கந்தசாமி ஆலோசனை நடத்தினார்.
    புதுச்சேரி:

    முத்தியால்பேட்டை உள்பட புதுவையில் 11 நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் உள்ளது. இதில் 1,200 குடும்பத்தினர் பதிவு செய்து நெசவுதொழில் செய்து வருகின்றனர்.

    கைத்தறி மூலம் நெசவு செய்யும் நெசவாளர்களிடம் இருந்து கடந்த காலங்களில் அரசு நிறுவனமான பாண்டெக்ஸ், பாண்பேப் துணிகளை கொள்முதல் செய்து விற்பனை செய்து வந்தது. ஆனால், சில ஆண்டாக பாவு நூல் வழங்காததாலும், வழங்கிய துணிகளுக்கு உரிய தொகை வழங்காததாலும் நெசவு தொழில் நலிவடைந்துள்ளது.

    நெசவு தொழிலை மட்டுமே நம்பி வாழும் இந்த குடும்பத்தினரின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து அமைச்சர் கந்தசாமியிடம் பல முறை எடுத்துக்கூறி வையாபுரி மணிகண்டன் எம்.எல்.ஏ. தலைமையில் ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது அமைச்சர் கந்தசாமியும், அதிகாரிகளும் நெசவு தொழிலில் புதிய திட்டங்களை புகுத்தினால்தான் நெசவாளர்களின் வாழ்க்கை தரம் உயரும் என கருத்து தெரிவித்தனர்.

    எனவே, மத்திய ஜவுளித் துறை இயக்குனரகத்தின் கீழ் சென்னையில் இயங்கும் தென்மண்டல நெசவாளர் சேவை மையத்தின் இயக்குனரை சந்திக்க முடிவெடுக்கப்பட்டது. இதன்படி அமைச்சர் கந்தசாமி தலைமையில் துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, வையாபுரி மணிகண்டன் எம்.எல்.ஏ., பாண்பேப் இயக்குனர் கிருஷ்ண மூர்த்தி, மேலாண் இயக்குனர் செல்வராஜ், தொழில்நுட்ப மேலாளர் சதாசிவம், தயாரிப்பு மேற்பார்வையாளர் சுப்பிரமணியன் ஆகியோர் சென்னை தென்மண்டல நெசவாளர் சேவை மையத்திற்கு சென்றனர்.

    தென்மண்டல நெசவாளர் சேவை மைய இயக்குனர் விஜேஷ் நட்டியால், இணை இயக்குனர் ஹரி பிரசாத் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினர்.

    மத்திய அரசின் கிளஸ்டர் திட்டத்தின் கீழ் நெசவாளர்களின் அபிவிருத்திக்காக ரூ.2 கோடி, ரூ.11 கோடி, ரூ.20 கோடி என 3 திட்டங்கள் உள்ளது. இத்திட்டத்தின் கீழ் மத்திய அரசு 90 சதவீத நிதி அளிக்கிறது. கைத்தறியில் வழக்கமாக தயாரிக்கும் சேலை, துண்டு, வேட்டி ஆகியவற்றிற்கு மாற்றாக விலை உயர்ந்த லினன் துணிகளையும், விலை உயர்ந்த காட்டன் சேலைகளையும் தயாரிக்கலாம். இதற்காக மத்திய அரசு பயிற்சியும் தருகிறது. இதுபோன்ற உயர் ரக துணிகளை தயாரித்தால் அவற்றை வியாபாரிகள் நேரடியாகவே கொள்முதல் செய்வார்கள். இதனால் நெசவாளர்களின் வாழ்க்கைத்தரம் உயரும் என தென்மண்டல நெசவாளர் சேவை மைய இயக்குனர் தெரிவித்தார்.

    அப்போது அமைச்சர் கந்தசாமி, வையாபுரி மணிகண்டன் எம்.எல்.ஏ. ஆகியோர் புதுவை நெசவாளர்களுக்கு பயிற்சி அளிக்கவும், மத்திய அரசின் திட்டத்தின் கீழ் நிதியை பெற்றுத்தரவும் உதவ வேண்டும். புதுவைக்கு நேரில் வந்து நெசவாளர்களை சந்தித்து ஆய்வுக்கூட்டம் நடத்தி அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும் என தென்மண்டல நெசவாளர் சேவை மைய இயக்குனரை கேட்டுக்கொண்டனர்.

    இதையேற்ற தென் மண்டல நெசவாளர் சேவை மைய இயக்குனர் வருகிற 21-ந்தேதி புதுவைக்கு வருவதாக ஒப்புகொண்டார்.
    Next Story
    ×