search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    எலுமிச்சை பழ தோல் தரும் பலன்கள்
    X

    எலுமிச்சை பழ தோல் தரும் பலன்கள்

    எலுமிச்சைச் சாற்றில் உள்ள சத்துக்களை விட, அதன் தோல்தான் வைட்டமின் சி மற்றும் ஏ, பீட்டா கரோட்டின், கால்சியம், மெக்னீசியம் போன்ற சத்துக்கள் உள்ளன.
    உலகம் முழுக்க எல்லா பருவ காலங்களிலும் கிடைக்கும் ஒரே பழம் எலுமிச்சைதான். நம் எல்லோருடைய சமையலறையிலும் இருக்கக் கூடியது. அழகுப் பொருட்களில் முக்கிய பங்கு எலுமிச்சைக்கு உண்டு. எலுமிச்சையில் அதிகப்படியான வைட்டமின்கள், தாதுப்பொருட்கள் நார்ச்சத்துக்கள் உள்ளன. ஊட்டச் சத்தும் குறைவில்லாமல் கிடைக்கும்.

    எலுமிச்சைச் சாற்றில் உள்ள சத்துக்களை விட, அதன் தோல்தான் வைட்டமின் சி மற்றும் ஏ, பீட்டா கரோட்டின், கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், போலேட் போன்ற சத்துக்கள் உள்ளன. எது ஒன்றையும் சுத்தம் செய்வதில் இதன் தோல்தான் முதலிடத்தில் உள்ளது. இதன் தோல் மிகவும் நறுமணமிக்கதாகவும், புத்துணர்ச்சி அளிப்பதாகவும் உள்ளது.

    எலுமிச்சையின் தோலில், நம் சருமத்திற்கு ஏற்ற அனைத்து நன்மைகளும் உண்டு. அதில் உள்ள அமிலமானது நம் சருமத்தை மிருதுவாக்கி, பளிச்சென்ற தோற்றத்தை கொடுக்கும். நம் சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி புது செல்கள் வளரத் தூண்டுகிறது. எலுமிச்சை தோலை வெயிலில் உலர்த்தி நன்கு காய்ந்தவுடன் அதை பொடித்து அத்துடன் தேன், சர்க்கரை, ஆலிவ் எண்ணெய் சேர்த்து முகத்தில் பூசினால், முகம் பிளச் செய்தாற்போல் மாறிவிடும். சூரியக் கதிர்களால் ஏற்பட்ட கருமையும் மறையும்.



    எலுமிச்சை தோலின் உட்புறத்தில் உள்ள வெள்ளைத் தோலை நீக்கிவிட்டு, சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து, அதில் தேவையான அளவு வெந்நீர் ஊற்றிக்கொள்ள வேண்டும். 10 நிமிடங்களுக்கு பிறகு அதை வடிகட்டி, அத்துடன் தேன் கலந்து பருகலாம். இந்த டீ நம் ஜீரண மண்டலத்தை வலுப்பெறச் செய்வதோடு, உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது. மேலும் கல்லீரலுக்கு புத்துணர்ச்சி அளித்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது.

    நகங்களை 10 நிமிடங்கள் வெதுவெதுப்பான நீரில் ஊற வைத்த பின்பு எலுமிச்சை தோலால், நகங்களின் மேல் 30 வினாடிகள் தேய்த்த பின்பு கழுவ வேண்டும். இது போல் 2 நாட்களுக்கு ஒருமுறை செய்து வந்தால், நகங்களில் உள்ள மஞ்சள் நிறம் மறைந்து விடும். இதேபோல பற்களில் தேய்த்து வாய் கொப்பளித்தால், பற்களில் உள்ள மஞ்சள் நிறம் நாளடைவில் மறைந்து, வெண்மையான புன்னகையை பெறலாம்.

    எலுமிச்சை தோலை நன்றாகத் துருவி ஸ்பிரேயர் உள்ளே போட்டு, அத்துடன் ஒயிட் வினிகரை சேர்க்க வேண்டும். அதை நல்ல வெளிச்சம் உள்ள இடத்தில் 2 வாரம் வைக்க வேண்டும். பின்பு அதனை கிரானைட், மார்பிள் தவிர மற்ற இடங்களில் சுத்தம் செய்யும் கலவையாக பயன்படுத்தலாம். வீட்டில் எறும்பு, கரப்பான்பூச்சி தொல்லை இருந்தால் எலுமிச்சை தோலை நறுக்கி வைத்தால் போதும். அவை ஓடி மறைந்துவிடும்.
    Next Story
    ×