search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    வலி நிவாரணி மாத்திரைகளுக்கும் மாரடைப்புக்கும் தொடர்பு?
    X

    வலி நிவாரணி மாத்திரைகளுக்கும் மாரடைப்புக்கும் தொடர்பு?

    வீரியம் மிக்க வலி நிவாரணி மாத்திரைகளைப் பயன்படுத்துவதற்கும் மாரடைப்புக்கும் தொடர்பு இருக்கலாம் என்று புதிய ஆய்வு கூறுகிறது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
    வீரியம் மிக்க வலி நிவாரணி மாத்திரைகளைப் பயன்படுத்துவதற்கும் மாரடைப்புக்கும் தொடர்பு இருக்கலாம் என்று புதிய ஆய்வு கூறுகிறது. வலி நிவாரணி மாத்திரைகளை எடுத்துக்கொண்ட முதல் 30 நாட்களில் இந்த ஆபத்து அதிகமாக இருக்கும் என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் இந்தக் கண்டுப்பிடிப்புகள் தெளிவானதாக இல்லை, மாரடைப்புக்கு வலி நிவாரணி மாத்திரைகளைத் தவிர வேறு காரணங்களும் இருக்கலாம் என்று சிலர் கூறுகின்றனர்.

    சர்வதேச விஞ்ஞானிகள், 4 லட்சத்து 46 ஆயிரத்து 763 பேரிடம் இருந்து தகவல்களைச் சேகரித்து மாரடைப்பு எதனால் வருகிறது என ஆராய்ந்தனர். இந்த ஆய்வில், வீக்கத்துக்கு எதிரான ஸ்டீராய்டு கலப்பில்லாத மருந்துகளைப் பயன்படுத்தியவர்கள் மீது கவனம் செலுத்தப்பட்டது.

    இந்தத் தகவல்களை ஆராய்ந்த கனடா, பின்லாந்து மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், இம்மாதிரியான ஸ்டீராய்டு இல்லாத வலி நிவாரணிகளை எடுத்துக்கொள்வதால் மாரடைப்புக்கான ஆபத்துகள் அதிகமாக இருப்பதாகவும், குறிப்பாக, அதை உபயோகிக்கும் முதல் வாரத்தில்கூட அதிக ஆபத்துகள் வரக்கூடும் என்றும், அதிக ‘டோஸ்’ மாத்திரைகளை எடுத்துக்கொள்பவர்களுக்கு முதல் மாதத்திலேயே ஆபத்துகள் வர வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

    இந்த மாத்திரைகளுக்கும் மாரடைப்புக்கும் உள்ள தொடர்பைப் புரிந்துகொள்ள பல விஷயங்கள் தடையாக இருப்பதாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். லண்டன் திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஒருவர், இந்த ஆய்வானது ஸ்டீராய்டு அற்ற வலி நிவாரணிகளுக்கும் மாரடைப்புக்கும் உள்ள தொடர்பை சிறிது எடுத்துக்காட்டுவதாகக் கூறுகிறார்.

    அதிக நோயாளிகள் மீது இந்த ஆய்வை நடத்தியபோதும், இதைப் பற்றிய சில அம்சங்கள் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்கிறார் அவர். மாரடைப்பு வராமல் இருப்பதற்கு வலி நிவாரணிகள் காரணமாக இல்லாமலும் இருக்கலாம் எனவும் அவர் கூறுகிறார்.



    ‘எடுத்துக்காட்டாக, அதிக வலியுடைய ஒருவருக்கு அதிக ‘டோஸ்’ மாத்திரை பரிந்துரைக்கப்பட்டு அவருக்கு மாரடைப்பு வந்தால், அதற்குக் காரணம் வலி நிவாரணியா அல்லது வேறு காரணமா என்று கண்டுப்பிடிப்பது சற்றுக் கடினம்’ என அவர் கூறினார்.

    ‘அதற்கான காரணம் முழுவதுமாக வேறாகக் கூட இருக்கலாம். மேலும் இதய ஆரோக்கியத்துடன் தொடர்புடைய பிற நோய்களான புகைபிடித்தல் மற்றும் அதிக உடல் எடை ஆகியவையும் காரணமாக இருக்கலாம்’ என்றும் அவர் கூறுகிறார்.

    இங்கிலாந்து மருத்துவ வழிகாட்டுதலின்படி, இதய நோயுள்ளவர்கள் ஸ்டீராய்டு அற்ற வலி நிவாரணிகளை மிகவும் கவனத்துடன் உபயோகிக்க வேண்டும், தீவிரமான இதயக் கோளாறு உள்ளவர்கள் அம்மாத்திரைகளை பயன்படுத்தாமல் இருப்பது சிறந்தது.

    நோயாளிகளும், டாக்டர்களும் இம்மாதிரியான அதிக ‘டோஸ்’ கொண்ட வலி நிவாரணிகளைப் பயன்படுத்துவதற்கு முன்னதாக அவற்றில் உள்ள ஆபத்துக்களையும் அதன் பயன் களையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும். அதுவும் குறிப்பாக மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆபத்துகள் அதிகம் என்பதை உணர வேண்டும் என இங்கிலாந்து ஹார்ட் பவுண்டேஷனை சேர்ந்த டாக்டர் ஒருவர் கூறுகிறார்.

    மேலும் இம்மாதிரியான மாத்திரைகளைப் பரிந்துரைக்கும் முன், நோயாளிகளின் தனிப்பட்ட மருத்துவ நிலையையும், அவர்கள் முன்பு பயன்படுத்தி வந்த மருந்துகளையும் கவனத்தில்கொள்ள வேண்டும். மேலும் அவர்கள் முறையாக கண்காணிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

    தேவையென்றால், வீரியம் குறைந்த, ஸ்டீராய்டு கலப்பற்ற வலி நிவாரணிகளை குறைந்த காலத்திற்கு மட்டுமே எடுத்துக்கொள்ளலாம் என்று  அறிவுறுத்தப்படுகிறது. இம்மாத்திரைகள் அதிகப்படியாக எடுத்துக்கொண்டால் உடனடியாக டாக்டர்களை நாட வேண்டும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

    இதனால் எந்த மாதிரியான ஆபத்து வரும் என்றோ, மாரடைப்பு வருவதற்கான அடிப்படைக் காரணம் எந்தளவு என்றோ இந்த ஆய்வில் தெளிவாக குறிப்பிடவில்லை. வலி நிவாரணிகளை சிறிது காலம் பயன்படுத்தினாலும் அதிக ஆபத்துக்கு உள்ளாகக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டாலும், அதைப் பற்றிய தெளிவான தகவல் இந்த ஆய்வில் இல்லை என லண்டன் மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் கூறுகிறார்.
    Next Story
    ×